நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கேள்வி:சரந் நவராத்திரி பூஜைகளை காலையில் செய்ய வேண்டுமா? இரவு செய்ய வேண்டுமா?
பதில்:சரந்நவராத்ரி பூஜைகளில் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று விதிக்காமல், பல்வேறு விதமான மாற்று வழிகளை கூறியுள்ளார்கள்.
முக்கியமாக சரந் நவராத்திரி என்பது பூஜைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விரதம்.
இந்த பூஜைகளை முக்காலங்களிலும் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. காலை மதியம் மாலை மூன்று வேளைகளும் பூஜை செய்யவேண்டும்.
இவற்றில் ஒரு நேரத்தில் பூஜையை விரிவாகச் செய்து விட்டு மீதி இருவேளைகள் இலகுவாக செய்யலாம். இரவில் பிரதானமாக வழிபடுபவர்கள் அன்று காலையிலிருந்து உபவாசமோ ஏக புக்தமோ இருந்து விரதம் கடைப் பிடிப்பார்கள். ஆனால் இரவுதான் பூஜை செய்கிறோமே என்று காலையும் மதியமும் பூஜையை தவிர்க்கக்கூடாது. மூன்று வேளையும் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இரு வேளைகளிலாவது செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
காலையும் மாலையும், அதிலும் பிரதானமாக, ப்ராதக்கால பூஜை மிக முக்கியம். ஒருவேளை, இரவு மிகச்சிறப்பாக பூஜை செய்பவர்களாக இருந்தால் காலையில் சுருக்கமாக செய்துகொள்ளலாம். அதேபோல் காலையில் சிறப்பாக செய்பவர்கள் இரவு சுருக்கமாக செய்யலாம்.
அதனால் இரு பொழுதுகள் அல்லது மூன்று வேளைகள் வழிபாடு செய்யும் வழிமுறைகளை தர்ம சாஸ்திரம் விவரிக்கிறது.