திருப்புகழ் கதைகள் பகுதி 63
திருப்புகழில் இராமாயணம் – தாரை
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தாரையைப் பற்றி தனிப் பாடல் ஒன்றில் ஒரு சுவையான செய்தி உண்டு. ஒருவன் தன் காலில் நெருஞ்சி முள் குத்திவிட்டது. மிகவும் வலிக்கிறது ஏதாவது மருந்து கொடுங்கள் என மருத்துவரிடம் கேட்கிறான். அந்த மருத்துவர் ஒரு கவிஞர். தற்போது ஒரு விளம்பரத்தில் வரும் மருந்துக் கடைக்காரர் போல ‘லாலிபாப்’, ‘மிளகாய்’ போன்றவற்றை எடுத்துக் கொடுக்கவில்லை. அதைவிட கிண்டலாக ஒரு கவிதை வடிவில் பதில் சொல்லுகிறார்.
பதில் இதுதான் …-
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் காலெடுத்துத் தேய்
பத்துரதனாகிய தசரதனின், புத்திரானாகிய இராமனின், நண்பனாகிய சுக்ரீவனின் எதிரியாகிய வாலியின் மனைவியாகிய தாரையின் காலெடுத்துவிட்டுத் தேய் என்பது பதில். அதாவது தரையில் காலைத் தேய் அதுதான் சிகிச்சை என்கிறார்.
தாரை பஞ்சகன்னியரில் ஒருவர். பஞ்சகன்னிகைகள் என்பவர்கள் இந்து மதத்தில் ஐந்து பதிவ்ரதைகள் ஆவர். காலையில் எழுந்தவுடன் ‘பிராத ஸ்மரனம்’ பாராயணம் செய்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதில் வரும் ஒரு ஸ்லோகம்
அஹல்யா, த்ரௌபதீ, சீதா, தாரா மண்டோதரி ததா
பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்
என்பதாகும். இந்த ஐந்து பெண்களின் கதை தெரியாதோர் பாரத நாட்டில் இல்லை. அவர்களை நினைத்த மாத்திரத்தில் எல்லா பாபங்களும் அழிந்துவிடும் என்று ஸ்லோகத்தின் கடைசி வரி கூறுகிறது.
இந்தப் பட்டியலிலுள்ள அகல்யை, திரவுபதி, சீதை, தாரா, மண்டோதரி ஆகிய எவருமே கன்னிப் பெண்கள் அல்லர். எல்லோரும் திருமணமானவர்கள். பின்னர் ஏன் பஞ்சகன்யா என்று சொல்லுகிறோம்? அவர்கள், மனதளவில் ஒரு கன்னிப் பெண் போல தூய்மையானவர்கள். வேறு ஆடவரை எண்ணாதவர்கள்; உடலுறவை ஒரு சிற்றின்பக் கருவியாகப் பயன்படுத்தாமல் வம்ச விருத்திக்கு மட்டுமே பயன்படுத்தியவர்கள்.
புராணங்களில் அசுரர்களும், தேவர்களும் காச்யப ரிஷியின் பிள்ளை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு ஆதரவாய் இருந்த திராவிட இயக்கங்களும் அசுரர்களை திராவிடர் என்றும் தேவர்களை ஆரியர் என்றும் முத்திரை குத்திவிட்டனர்.
மேற்கண்ட பட்டியலில் மண்டோதரி என்பார், ராட்சச இராவணனின் மனைவி; தாரை என்பவளோ, குரங்கின அரசன் வாலியின் மனைவி. இவர்களை, தினமும் நினைக்க வேண்டிய புனிதர் பட்டியலில் பழங்காலத்திலேயே சேர்த்து வேற்றுமை பாராட்டாது அனைவரும் முக்கியமாக பிராமணர்கள் சொல்லிவருவது, ஆரிய-திராவிட இனவெறிப் போக்கு எத்தனை அபத்தமானது என விளக்கும்.
இப்படிப்பட்ட தாரையைப் பற்றி அருணகிரியார் தவறாக எழுதுவாரா? ஆகவே அருணகிரியார் இங்கே இராமன் தாரையை சுக்ரீவனிடத்தில் அடைக்கலமாகக் கொடுத்தார் எனப் பொருள் கொள்ள வேண்டும். கம்பர் இதனை மிக அருமையாக விளக்கியுள்ளார்.
ஆரியன் அருளின் போய்த் தன் அகல் மலை அகத்தன் ஆன
சூரியன் மகனும், மானத் துணைவரும், கிளையும், சுற்ற,
தாரையை வணங்கி, அன்னாள் தாய் என, தந்தை முந்தைச்
சீரியன் சொல்லே என்ன, செவ்விதின் அரசு செய்தான்.
-32 கம்பராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/அரசியற் படலம்
சுக்ரீவனை இராமன் கிட்கிந்தையின் அரசனாக மூடிசூட்ட இலக்குவன் மூலம் ஏற்பாடு செய்கிறார். பின்னர் மாரிக்காலம் முடிந்தவுடன் படையுடன் வருக எனக் கூறிவிட்டு அருகில் உள்ள வேறு ஒரு மலைக்குச் செல்கிறார்.
சுக்ரீவன் தன் அண்ணனின் மனைவியாகிய தாரையை தாய் என வணங்கி அரசு நடாத்தினான் என கம்பர் கூறுகிறார்.