திருப்புகழ் கதைகள் பகுதி 81
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கமல மாதுடன் – திருச்செந்தூர்
உமையம்மையின் பல வடிவங்கள் – 2
இத்திருப்புகழில் அருணகிரியார் உமையம்மையை அகலாத இளம் பருவத்தையுடைய கன்னிப்பெண் குமரி என்றும், கரிய நிறத்தை உடைய காளி என்றும், அடியவர் பயத்தை நீக்கும் பயங்கரி என்றும், ஆன்மாக்களுக்குச் சுகத்தைத் தருகின்ற சங்கரி என்றும், நீல நிறத்தை உடைய நீலி என்றும், பொன் நிறத்தை உடைய கவுரி என்றும், பெரியவற்றிற்கெல்லாம் பெரிய பொருளாக இருக்கும் பரம்பரை என்றும், உலக மாதாவான அம்பிகை என்றும், சுத்த மாயையான குடிலை என்றும், யோகினி என்னும் தெய்வமாக இருப்பவளும், பாவிகளுக்குக் கொடியவளாகத் திகழ்பவளான சண்டினி என்றும், குண்டலி என்னும் குண்டலி சத்தியும், எங்கள் தாயாகிய ஆயி எனப்படுவளும், குறைவு இலாள் எனப்படுபவளும், சுவர்க்கலோகத்தை அருள்பவர் எனப் பொருள்படும் மந்தரி என்றும், முடிவில்லாதவள் எனப் பொருள்படும் அந்தரி என்றும், பலவகைப்பட்ட சிவாகமங்களால் துதிக்கப்படும் கட்டழகு உடைய வெகுவித ஆகம சுந்தரி என்றும், உமை எனப்படும் உமாதேவி என்றும் பாடுகிறார்.
பார்வதி என்பவர் இந்து சமயத்தில் கூறப்படும் பெண் தெய்வமும் சிவபெருமானின் துணைவியும் ஆவார். இவர் வளம், அன்பு, பக்தி, பெருவலிமை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார். சக்தியின் பொதுவான வடிவமாக பார்வதியைக் கொள்வதே மரபாகும்.
இந்தியத் தொன்மங்களில் ஆயிரத்துக்கும் மேலான வடிவங்களும், அம்சங்களும் பெயர்களும் புராணக்கதைகளும் பார்வதிக்கு உண்டு. லட்சுமி, சரஸ்வதி ஆகியோருடன் முத்தேவியர்களில் ஒருவராகப் பார்வதி இருக்கிறார். மலையரசனான இமவான் மற்றும் மேனை ஆகியோரின் மகளாகப் பார்வதி பிறந்தார். முருகன், பிள்ளையார் ஆகியோரின் தாயும் இவரே. பார்வதியை விஷ்ணுவின் தங்கையாகவும் கருதுவது உண்டு.
ஈசனுடன் இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றான சைவநெறியின் மையத்தெய்வமாக பார்வதி விளங்குகிறார். உயிர்களின் சிவகதிக்கு உதவுகின்ற சுத்தமாயையும், ஈசனின் சக்தியும் அவளே என்பது சைவர்களின் நம்பிக்கை ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியா, தென்கிழக்காசியா முதலான பல இடங்களிலும் பார்வதியின் சிற்பங்களும், நம்பிக்கைக்களும்,நிறையவே காணப்படுகின்றன.
மலையரசன் மகளென்பதால், மலையைக் குறிக்கும் “பர்வதம்” எனும் வடமொழிச் சொல்லிலிருந்து “பார்வதி” எனும் பெயர் வந்தது. சம்ஸ்க்ருதத்தில் மலை என்பதற்கு கிரி என்று பெயர். எனவே கிரிஜை, கிரிஜா, சைலஜை, சைலஜா மலைமகள் முதலான பல பெயர்கள் அவளுக்குண்டு. லலிதையின் பேராயிரம் அல்லது லலிதா ஸஹஸ்ரநாமம் என்ற வடமொழிநூல், அவளது ஆயிரம் திருநாமங்களைச் சொல்கின்றது.
“உமையவள்” என்பது பார்வதிக்குச் சமனாக, பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அம்பிகை, சக்தி, அம்மன், மகேசுவரி, கொற்றவை என்று அவளது பெயர்களின் பட்டியல் நீள்கின்றது. காமாட்சி, அன்னபூரணி ஆகிய பார்வதியின் இருவடிவங்களும் புகழ்பெற்றவை. வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில் கௌரி என்றும், கருமை நிறத்தில் காளி என்றும் போற்றப்படும் உமையின் இருவடிவங்களும் பரவலாகப் போற்றப்படுகின்றன.