புதுவை: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி 4 நாட்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. .தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது சிவத்தலமாகத் திகழும் இந்தக் கோயிலில் குடமுழுக்கு வைபவம் நடைபெறவுள்ளது.
இத்தலத்தில் சனீஸ்வரன் சிவ பெருமானை வணங்கி பேறு பெற்றார் என்பதால், இத்தல சனீஸ்வர பெருமான் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தலத்தில் சனீஸ்வரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. இங்கே உள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரை தரிசனம் செய்து, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு அன்பர்கள் பேறு பெறுகின்றனர்.
இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் 7ஆம் தேதி காலை 4 மணியில் இருந்து 10 தேதி இரவு 10 வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று கூறப் பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் பிப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் பின்புதான் தரிசனம் செய்ய இயலும்.