கொரோனா அச்சம் காரணமாக, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத இருந்த 5ஆவது டெஸ்ட் போட்டி கைவிடப் பட்டதை அடுத்து, இந்திய அணி தொடரை வென்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு டெஸ்ட் முடிவில் இரண்டில் வென்ற இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதியானது. மேலும் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. அதே நேரம், இந்திய வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதனிடையே, மான்செஸ்டர் நகரில் நடத்த திட்டமிடப் பட்டிருந்த 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கச் சென்ற இந்திய அணியில், ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தகைய பின்னடைவுகளால், மான்செஸ்டர் போட்டிக்காக வீரர்கள் எவரும் பயிற்சியில் ஈடுபடவில்லை. மேலும், டெஸ்ட் போட்டியில் களம் இறங்கி விளையாடுவதிலும் தயக்கம் காட்டியதாகத் தெரிகிறது.
இதை அடுத்து பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 5வது போட்டியைக் கைவிட்டு விடுவது என்று தீர்மானித்தனர். இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்த போது, இந்திய அணி தரப்பில் சிலருக்கு கொரோனா உறுதியானதால், அச்சம் காரணமாக வீரர்களை இந்திய அணியால் களமிறக்க முடியவில்லை என தெரிவித்தது.
இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இரண்டில் இந்திய அணி வென்றுள்ளது. ஒரு போட்டியை இங்கிலாந்து அணி வென்றது. ஒரு போட்டி டிரா ஆனது. இதனால், இந்திய அணி 2-1 என முன்னணியில் இருப்பதால், டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதாகக் கருதப் பட்டுள்ளது.