ஐ.பி.எல் 2021 – செவ்வாய் கிழமை – 28.09.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் கொல்கொத்தா நைட் ரைடர்ஸுக்கும் டெல்லி கேபிடல்ஸுக்கும் இடையே நடந்தது. இரண்டாம் ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மும்பை இண்டியஸ் அணிக்கும் இடையே நடந்தது. இரண்டும் குறைவான ரன்கள் எடுக்கப்பட்ட ஆட்டங்கள்.
முதல் ஆட்டம்
பூவா தலையா வென்று கொல்கொத்தா அணி டெல்லி அணியை மட்டையாடச் சொன்னது. டெல்லி அணியில் காயம் காரணமாக ப்ரித்வி ஷா ஆடவில்லை. அவருக்குப் பதிலாக ஸ்டீவன் ஸ்மித் ஆடினார். ஷிகர் தவானும் (24) ஸ்மித்தும் (39) நல்லதொடக்கத்தைக் கொடுத்தனர். ரிஷப் பந்த் (39) நன்றாக ஆடினார். இவர்கள் மூவரின் மொத்த ஸ்கோர் 102. இருபது ஓவர் முடிவில் டெல்லி அணி எடுத்த மொத்த ரன் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 127. இதிலிருந்து டெல்லி அணி ஆடிய விதத்தை அறிந்து கொள்ளலாம். ஏனைய பேட்ஸ்மெங்களில் மூவர் பூஜ்யம், மற்ற மூவர் ஒற்றை இலக்க ரன்கள்.
இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியும் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. பதினைந்தாவது ஓவரில் தினேஷ் கார்த்திக் அவுட்டானபோது அந்த அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 96 ரன். அடுத்த இரண்டு ஓவர்களில் நரைனும் ராணாவும் ஆடிய ஆட்டத்தில் 18.2 ஓவரில் கொல்கொத்தா வெற்றிபெற்று விட்டது.
இரண்டாவது ஆட்டம்
இந்த ஆட்டத்திலும் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் செய்தது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி நன்றாகத்தான் விளையாடிக்கொண்டிருந்தார்கள். திடீரென ரோஹித் ஷர்மா கிரென் பொலார்டை பந்து வீசச் சொன்னார். அவர் ராகுல், கெயில் ஆகிய இருவரின் விக்கட்டுகளை எடுத்தார். க்ருணால் பாண்ட்யா, பும்ரா இருவரும் கஞ்சத்தனமாக பந்து வீசினர். இருபது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி ஆறு விக்கட் இழப்பிற்கு பின்னர் 135 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய மும்பை அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா பத்து பந்துகளில் எட்டு ரன் எடுத்து அவுட்டானார். அடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் அவுட்டானார். இன்று மும்பை அணியில் சௌரப் திவாரி ஆடினார். இவர் 37 பந்தில் 45 ரன் எடுத்தார். அதன் பின்னர் மிகவும் மெதுவாக ரன் வந்துகொண்டிருந்தது. திடீரென்று போலார்ட் ஒரு ஆறு, ஒரு நாலு அடிக்க, ஹர்திக் பாண்ட்யா இரண்டு ஆறு, நான்கு நலு அடிக்க, பதினெட்டாவது ஓவர் முடிவில் மும்பை அணி வென்றுவிட்டது.
இந்த வெற்றியால் மும்பை அணி பத்து புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திற்கு வந்துள்ளது.