![தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: அதென்ன ரெட் அலர்ட்..?! 1 red alert rain](https://dhinasari.com/wp-content/uploads/2019/10/red-alert-rain.jpg)
தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு இட்டுள்ளார்.
மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், நிவாரண மையங்களில் மக்களை தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
முன்னதாக, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் நாளை மிக மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்!
ரெட் அலெர்ட் என்றால் அபாயம் என்று அர்த்தம் கிடையாது என்று, வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வசதியாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ‘ரெட் அலர்ட்’ என்பது தமிழகம் முழுவதும் அல்ல; தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …
இதனால் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.