எம்.எல்.ஏ.,க்கள் மறைவு காரணமாக, தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் காலமானதால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98ஆகக் குறைந்துள்ளது.
முன்னதாக, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக., நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிப்ரவரி 29-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 29-2-2020 சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம் ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என்று அன்பழகன் தெரிவித்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டிருந்தது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. தமிழக சட்டசபையில் அவற்றுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி வரும் நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இந்நிலையில், க.அன்பழகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். மேலும், திமுக., சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் அடுத்தடுத்த நாட்களில் காலமானதால் நாளை நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.