புதிய கல்விக் கொள்கை குறித்து கமிட்டி அளித்த வரைவு அறிக்கை, எந்த மொழியையும் கட்டாயம் என்று ஆக்கவில்லை. ஊடகங்களில் தவறாக செய்தி
பரப்பப் பட்டிருப்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.. என்று டிவிட்டர் பதிவில் கூறியிருந்தார் பிரகாஷ் ஜாவ்டேகர்.
முன்னதாக, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி, ஹிந்தி பேசாத மாநிலங்களிலும், ஹிந்தியை கட்டாய பாடமாக்க, பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக ஊடகங்களில் ஒரு சர்ச்சை கிளப்பப் பட்டது.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் இல்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். மும்மொழி கொள்கை குறித்து அறிக்கையை குழு தயாரித்துள்ளது. பொது மக்களின் கருத்து கேட்ட பின்னர் தான் மத்திய அரசு தனது முடிவை எடுக்கும்.. என்றார்.
அது போல், மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது: நிபுணர் குழு அமைச்சகத்திடம் அறிக்கை அளித்துள்ளது. இது கொள்கை கிடையாது. பொது மக்கள் கருத்து கேட்கப்படும். இது கொள்கை முடிவாக இருக்கும் என தவறாக பரப்பப்படுகிறது. எந்த மொழியும், எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்றார்.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள தேசிய கல்விக்கொள்கை, 1986 ல் உருவாக்கப்பட்டது ; 1992ல் திருத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2014 தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ., தாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய கல்விக்கொள்கை, தேசிய கல்வி ஆணையம் அமைப்போம் என்றும் வாக்குறுதி அளித்தது.
அதன்படி கடந்த பா.ஜ., ஆட்சியில், புதிய கல்விக்கொள்கையை வகுக்க கஸ்துாரிரங்கன் தலைமையில், 9 நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தனது பரிந்துரையை மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் சமர்ப்பித்தது. அதனை நேற்று நடந்த, புதிய மோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமர்ப்பித்தார்.
அமைச்சகத்தில் இணையதளத்திலும் அந்த 484 பக்க வரைவு அறிக்கை, பொதுமக்களின் கருத்து கேட்பிற்காக வெளியிடப்பட்டுள்ளது. இதன்மீது ஜூன் 30 வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக https://mhrd.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் சுட்டி.. https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/Draft_NEP_2019_EN.pdf
புதிய கல்விக்கொள்கை வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று புதிய தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வைகோ, டிடிவி தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அமமுக பொதுச் செயலாளர், டிடிவி தினகரன்:
8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைத் திணிக்கும் இம்முயற்சி நாட்டின்
பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும். எனவே இத்திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன்:
நான் இந்தி படத்தில் நடித்தவன்; எதையும் திணிக்க கூடாது என்பது என்னுடைய கருத்து, விருப்பமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
மதிமுக பொதுச் செயலாளர், வைகோ:
புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயன்றால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.
இந்திய கம்யூனிட் கட்சியின் மாநிலச் செயலாளர், முத்தரசன்:
நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக இந்தி மொழியை திணித்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சந்திக்க நேரிடும் .
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு:
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது; இது வன்மையாக கண்டிக்கக் கூடியது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், வேல்முருகன்
மும்மொழி கொள்கை மாநில உரிமையைப் பறிக்கும் இந்த அரதப் பழசான புராணகால புரட்டுக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக்கூடாது.
திமுக எம்பி, திருச்சி சிவா
தமிழகத்தில் எந்த காலத்திலும் இந்தியை கால் ஊன்ற திமுக அனுமதிக்காது. இங்கு தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க நினைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மும்மொழி கொள்கையை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள கண்டனத்தில்…
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை உள்நோக்கம் நிறைந்த அறிக்கையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு வரலாறுகளை ஆராய்ந்ததாகவோ, அடிப்படை நோக்கங்களை புரிந்ததாகவோ தெரியவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்ற முயற்சிப்பது தேன்கூட்டில் கல் வீசுவது போன்றது. இருமொழிக் கொள்கை என்ற தேன் கூட்டில் கல்லெறிய வேண்டாம். மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது. மும்மொழிக் கொள்ளையை அமல்படுத்துவது பேரிடரை ஏற்படுத்தி விடும்.
மும்மொழிக் கொள்கைக்கு திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். அன்னைத் தமிழின் பெருமையை சீர்குலைக்கும் எந்தவித பரிந்துரைகளையும் திமுக ஏற்றுக்கொள்ளாது. மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக வீரவணக்கம் செலுத்தி வருவதை பாஜக மறந்துவிட்டதோ? எனவே, இந்தியை திணிக்கும் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்… என்று கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் பின்பற்றப்படும் இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை என்றும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி பரிந்துரையை தமிழக அரசு ஏற்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு இருமொழி கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.