டிக் டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் ஆபிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், டிக் டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்க ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள்தான் அத்தகைய ஏமாற்றத்தை டிக்டாக் செயலியின் ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறது.
டிக் டாக் மொபைல் செயலிக்கு தடை விதிக்குமாறு கடந்த 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் டிக் டாக் செயலியை தத்தமது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது என்று தகவல் வெளியானது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை வெளிவரவில்லை.
முன்னதாக தங்கள் தளத்தில் இருந்த விதிமுறைகளை மீறிய 60 லட்சம் பதிவுகளை நீக்கிவிட்டதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்திருந்தது. 13 வயதுக்கு மேற்பட்டவர்களே இச்செயலியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இவ்விகாரத்தில் அரசின் விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் டிக்டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது! இருப்பினும் இத்தகைய நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாகக் கூறப் படுகிறது.
டிக்டாக் செயலி மூலம், பாலியல் ரீதியான வக்கிர எண்ணங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் பகிரப் படுவதாகவும், நிழல் உலக வீடியோக்களும் பகிரப் படுவதாகவும் குற்றச்சாட்டு இருந்தது.