இந்தியாவில் பலரையும் சென்றடைந்துவிட்டது ஜியோ போன். தொழில் நுட்ப உலகில், குறிப்பாக, செல்போன் சேவையில் புரட்டிப் போற்ற மாற்றங்களைக் கொண்டு வந்த ஜியோ சேவைகளை இன்று பலரும் பயன்படுத்துகின்றனர்.
விலையில்லா ஜியோ போன் ரூ 1500 என்ற குறைந்த முன்விலையில் அறிமுகப் படுத்தப் பட்ட போது, பலரும் போட்டி போட்டு வாங்கினர். ஆனால், அதில் வாட்ஸ் அப் இல்லாமல் இருந்தது பெரும் குறையாக இருந்தது அதன் பயனாளிகளுக்கு.
உலகின் முன்னணி மெசெஞ்சர் ஆப்பாகத் திகழும் வாட்ஸ்அப் ஆப்பினை , இப்போது ரிலையன்ஸ் ஜியோபோன் 4ஜி மாடலில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் வாட்ஸ்அப் படுவேகமாக ஈடுபட்டு வருகிறது.
4ஜி வோல்ட்இ சேவையில் முன்னணியில் உள்ள ஜியோ நிறுவனத்தின் இந்த 4ஜி ரிலையன்ஸ் ஜியோ போன் மாடல், மோஸில்லா கெய் ஓஎஸ் இயங்குதளத்தில் இயங்குகின்றது. 2.4 அங்குல திரையைக் கொண்டிருந்தாலும், இந்த மொபைலில் முன்னேற்பாடாக ஜியோ செயலிகளான ஜியோ ம்யூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து ஜியோ நிறுவன ஆப்ஸ்கள் மற்றும் புகழ்பெற்ற ஃபேஸ்புக் செயலியை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து , தற்போது வாட்ஸ்அப் செயலியை அறிமுகம் செய்வதற்கான முனைப்பில் உள்ளதாக வாட்ஸ்அப் தொடர்பான பல்வேறு மேம்பாடுகளை சோதனை நிலையில் வெளியிடும், WABetaInfo தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மொபைல் 512எம்பி ரேம் கொண்டு செயல்பட்டாலும் 8 ஜி.பி இன்பில்ட் மெமரி மற்றும் கூடுதலாக 64 ஜி.பி வரை நீட்டிக்க கூடிய வகையில் மைக்ரோ எஸ்டி கார்ட் பயன்படுத்தலாம். 2000mAh பேட்டரி கொண்டு ரிலையன்ஸ் ஜியோபோன் இயக்கப் படுகின்றது!