கடந்த ஜூன் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வானியல் நிகழ்வான சூரிய கிரகணத்தை பலரும் பூமியில் இருந்து பார்த்து மகிழ்ந்தனர். அது போல், வானில் இருந்து பூமியைப் பார்த்து, பூமியில் விழும் சந்திரன் நிழலைப் படம் பிடித்துள்ளது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா.
பூமியைச் சுற்றி வரும் சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே நேர்கோட்டில் கடந்து செல்லும் போது, சூரியனின் ஒளியை மறைத்து தன் நிழலை பூமியில் விழவைக்கும். இந்த நிகழ்வு சூரிய கிரகணம், அதாவது சூரியன் மறைப்பு என்று கூறப் படுகிறது.
இந்த வானியல் நிகழ்வு கடந்த 21ஆம் தேதி நிகழ்ந்தபோது, வட இந்தியாவில் உள்ளவர்கள் ஓரளவு முழுமையான சூரிய கிரகணத்தையும், தென் இந்தியாவில் உள்ளவர்கள் பகுதி சூரிய கிரகணத்தையும் கண்டார்கள். இதெற்கென சிறப்பு கண்ணாடி அணிந்தும், தொலைநோக்கியிலும் கண்டு ரசித்தனர். பூமியிலிருந்து, சூரியனைப் பார்த்தபோது, நிலவால் மறைக்கப்பட்ட சூரியன், ‘நெருப்பு வளையம்’ போல காட்சி அளித்தது.
இந்த நிகழ்வை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து கிறிஸ் காசிடி என்ற விண்வெளி வீரர் படம்பிடித்து அதை டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்
அந்தப் படங்களில், சூரியனின் ஒளியை மறைத்தபடி, சந்திரன் நிலவின் மேற்புறத்தில் பயணிக்கும் போது, அதன் நிழல் பூமியில் விழுகிறது. பூமி அளவில் பெரிது என்பதால், சந்திரனின் நிழல் ஒரு சிறிய பந்து போல் பூமியின் பரப்பில் விழுவதையும், அது ஒவ்வோர் இடமாக கடந்து செல்வதையும் படம் பிடித்துள்ளார்.
ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் “நெருப்பு வளைய” சூரிய கிரகணமாக இது தெரிந்தது. விண்வெளியில் இருந்து பார்க்கும் இந்தக் காட்சி நம் கற்பனையை மேலும் விரிக்கிறது. .
நாசா விண்வெளி வீரர் மட்டுமின்றி, விண்வெளியில் சுற்றித் திரியும் வானிலை செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியின் மேற்பரப்பில் சந்திரனின் நிழல் கடந்து செல்லும் வியத்தகு நிகழ்வை படம் பிடித்துள்ளன.
இதுகுறித்து அந்த நாசா விண்வெளி வீரர் கிறிஸ் காசிடி ட்விட்டரில் குறிப்பிடுகையில், “இன்று காலை நாங்கள் சீனாவுக்கு மேலே பறந்தபோது எங்கள் ஸ்டார்போர்டு பக்கத்தில் கடந்து வந்த வருடாந்திர சூரிய கிரகணத்தின் சூப்பர் கூல் காட்சி” என்று கூறியுள்ளார்.