புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உடல்நலன் அதிகமாக பாதிக்கப்படவும், மரணம் அடையவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆனால், புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா அபாயம் எந்த அளவுக்கு அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
ஐ.நா. சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் மற்றும் புகைப்பிடிப்பவர்கள் குறித்து வெளியான 34 ஆய்வு முடிவுகளை ஆராய்ந்து, இந்த வாரம் ஒரு அறிவியல் பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்றுப் பரவும் அபாயம் முதல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம், நிலைமை மோசமடைதல், கொரோனாவால் மரணம் அடைதல் வரை விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 18% பேர் புகைப்பிடிப்பவர்களாக இருப்பதும், கொரோனா நோயாளி புகைப்பழக்கம் கொண்டவராக இருப்பது அல்லது புகைப்பழக்கம் இல்லாதவர் என்பது, அவர்களது நிலைமை மோசமடைவது மற்றும் மரணத்துக்கான வாய்ப்பு அதிகரிப்பதோடு தொடர்புடையதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கும் போது அது தீவிரமடைவதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்துவதற்கும் தேவையான ஆதாரங்கள் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.