பாராலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அதனா மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் 216.8 புள்ளிகளைப் பெற்று பதக்கம் வென்றார். இவருக்கும் சீன வீரர் லூ சியாலாங்க்குக்கும் கடும் போட்டி நிலவியது. கடைசி இரு முயற்சியில் சீன வீரரை வீழ்த்தி சிங்ராஜ் வென்றார்.
இதன்மூலம் இந்தியா பெற்ற பதக்கங்கள் 8ஆக உயர்ந்துள்ளது. தரவரிசைப் பட்டியலில் இந்தியா 29ஆவது இடத்தில் இருக்கிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 24ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தியாவிலிருந்து 54 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் குதிரையேற்றம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் இறுதிப் போட்டி வரை நுழைந்த அவர் தோற்றாலும் வெள்ளி வென்றார். அதன்பின் உயரம் தாண்டுதலில் ஒற்றை கையுடன் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியா வீரர் நிஷாத் குமார்.
தொடர்ந்து வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலம் வென்றார். ஆனால் அவரது மெடல் வாபஸ் பெறப்பட்டது. நேற்றைய நாளை தங்கத்துடன் தொடங்கி வைத்தார் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான அவனி லெகாரா.
ஈட்டி எறிதல் பிரிவில் கலந்துகொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து தேவேந்திரா 64.35 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் சுந்தர்சிங் என்ற மற்றொரு வீரர் 64.1 மீட்டர் தூரம் வீசி எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச்சென்றனர்.
அதேபோல வட்டு எறிதலில் யோகேஷ் கத்தூனியா வெண்கலம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சுமித் அண்டில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.