உலகக் கோப்பை டி20 போட்டிகள் – இரண்டாம் நாள் – 17.10.2022
மேற்கு இந்தியத் தீவுகள் அணி அதிர்ச்சித் தோல்வி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
டாஸ்மானியா ஹோபர்ட் மைதானத்தில் இன்று இரண்டு குரூப் B பிரிவு ஆட்டங்கள் நடந்தன.
முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி (20 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 160 ரன், முன்சி 66, மேக்டெண்ட் 23, ஜோன்ஸ் 20, அல்சாரி 2/28, ஜேசன் ஹோல்டர் 2/14) மேற்கு இந்தியத்தீவுகள் அணியை (18.3 ஓவரில் 118 ரன்கள், ஹோல்டர் 38, வாட் 3/12, வீல் 2/32, லீஸ்க் 2/15) 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
பல ஆண்டுகளாக கிரிக்கட் ஆடிவரும் ஒரு அணி; இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற அணி; மேற்கு இந்தியத் தீவுகள் அணி தகுதிச் சுற்றில் இருப்பதே ஆச்சரியமான விஷயம். அதிலே ஸ்காட்லாந்து போன்ற அணியிடம் தோற்பது என்பது எவ்வளவு அதிர்ச்சியான செய்தி.
நேற்று ஒரு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் தோற்றதுபோல மேற்கு இந்தியத்தீவுகள் அணியும் இன்று தோற்று விட்டது.
டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. ஸ்காட்லாந்து அணி வீரர்கள் நல்ல ரன் ரேட்டுடன் முதல் ஓவரில் இருந்து ஆடினர். அதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்திருந்தது.
ஸ்காட்லாந்து அணி விளையாடியபோது ஆட்டம் அரை மணி நேரத்திற்கு மழையால் தடைபட்டது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தங்களுடைய வெற்றிக்கான தேடலை நன்றாகவே தொடங்கினர். அவர்கள் முதல் 5.4 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தனர். ஆனால் அடுத்த 26 ரன்களில் ஏழு விக்கட்டுகளை இழந்தனர்.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் 12 ரன்கள் கொடுத்து மூன்று விக்கட் எடுத்தார். மைக்கேல் லீஷ் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். இதனால் மே.இ. தீவுகள் அணி 18.3 ஓவரில் 118 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தத் தோல்வி மே.இ.தீவுகள் அணிக்கு ஒரு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும். இலங்கை, மே.இ. அணிகள் இரண்டுமே அடுத்த போட்டியை வெல்ல வேண்டும். அப்போதுதான் மேற்கொண்டு போட்டியில் இடம் பெறமுடியும்.
இரண்டாவது ஆட்டம் ஜிம்பாபே – அயர்லாந்து
இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாபே அணி (174/7, சிக்கந்தர் ராசா 82, மத்வீவீர் 22, ஜோஷ் லிட்டில் 3/24) அயர்லாந்து அணியை (143/9, கெம்பர் 27, டாக்கெரல் 24, டிலானி 24, முசர்பானி 3/23) 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.
ஜிம்பாபே தொடக்கத்தில் தடுமாறியது. மூன்று விக்கட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் சிக்கந்தர் ராசாவின் அதிரடி ஆட்டத்தில் அந்த அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 174 எடுத்தது. அதன் பின்னர் ஆடிய அயர்லாந்து அணி ஆடியது. ஆனால் அதன் ரன் ரேட் ஜிம்பாபே அணியின் ரன் ரேட்டைவிட மிகக் குறைவாகக் குறைவாக இருந்தது. இறுதியில் ஜிம்பாபே அணி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது ஆட்டம்: தன்னம்பிக்கை தந்த வெற்றி
இந்த இரண்டு ஆட்டங்களைத் தவிர மூன்றாவது ஒரு ஆட்டமும் இன்று நடந்தது. அது இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடந்த பயிற்சி ஆட்டம். அதிலே இந்திய அணி முதலில் ஆடி 186/7 எடுத்தது.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோற்றுப்போனது.
இதில் சிறப்பு என்ன வென்றால் இந்திய அணி 47/0 என்ற ஸ்கோரில் இருந்தபோது கே.எல். ராகுல் 47 ரன், ரோஹித் ஷர்மா ரன் எடுக்காமல் பூஜ்யத்தில் இருந்தார். ராகுல் அந்த மாதிரி ஒரு அதிரடி ஆட்டம் ஆடினார்.
சூரியகுமார் யாதவ் 50 ரன்னும், தினேஷ் கார்த்திக் 20 ரன்னும், கோலி 19 ரன்னும் எடுத்தனர். அதன் பின்னர் ஆஸ்திரேலியா அணி மிகச் சிறப்பாக ஆடியது. இருப்பினும் 20ஆவது ஓவரில் முகமது ஷமி கடைசி நாலு பந்துகளில் நாலு விக்கட்டுகளை வீழ்த்தினார்; அதில் ஒரு ரன் அவுட். இந்த வெற்றி இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.