உலகக் கோப்பை டி20 போட்டிகள் – 20ம் நாள் – 4.11.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இங்கிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்லுமா?
இன்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் உலகக் கோப்பை டி20 போட்டியில் குரூப் 1 பிரிவில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.
முதல் ஆட்டம் நியூசிலாந்து-அயர்லாந்து
நியூசிலாந்து அணி (185/6, கேன் வில்லியம்ஸ் 61, ஆலன் 32, மிட்சல் 31, கான்வே 28, பிலிப்ஸ் 19, ஜோஷ் லிட்டில் 3/22) அயர்லாந்து அணியை (150/9, பால் ஸ்ட்ர்லிங் 37, பல்பர்னி 30, டக்கர் 13, டாக்ரெல் 23, ஃபர்கூசன் 3/22) 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில், இந்த டி20 உலக்கோப்பையின் இரண்டாவது ஹாட்ரிக் நிகழ்த்தப்பட்டது. அயர்லாந்து அணியின் ஜோஷ் லிட்டில் நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது 19ஆவது ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சனை அவுட்டாக்கினார். அதன் பின்னர் அடுத்த இரு பந்துகளில் நீஷம், சாண்ட்னர் இருவரையும் எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீசத் தீர்மானித்தது. நியூசிலாந்து அணி வீரர்கள் நன்றாக ஆடினார்கள்.
கேன் வில்லியம்ஸ் 35 பந்துகளில் 65 ரன் அடித்து, தனது பழைய ஃபார்முக்கு வந்தார். இருந்தாலிம் ஜோஷ் லிட்டிலின் அந்த 19ஆவது ஓவர் ஹாட்ரிக் நியூசிலாந்து அணியின் ஸ்கோரை 20 ஓவரில் 6 விக்கட் இழப்பிற்கு 185 ரன்னிற்கு கொண்டுவந்து நிறுத்தியது. பின்னர் ஆடவந்த அயர்லாந்து அணிக்கு தொடக்கம் நன்றாக அமைந்தது. இருந்தாலும் கடைசி நாலு ஓவரில் கேம்பர், ஹேண்ட்,டாக்ரெல், மார்க் அடேர் ஆகியொர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 150 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதனால் எதிர்பார்த்ததுபோல நியூசிலாந்து அணி நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டம், ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான்
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு (164/7, நயீப் 39, குர்பாஸ் 30, சத்ரன் 26, ரஷீத்கான் 48) எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி (168/8, கிளன் மேக்ஸ்வெல்54, மார்ஷ் 45, வார்னர் 25, ஸ்டோயினிஸ் 25, நவ்வின்-உல்-ஹக் 3/21) 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்றாலும் பெரும் சிக்கலில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு கடைசி வாய்ப்பான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியால் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்பட முடியவில்லை. மேக்ஸ்வெல் (54*), மிட்செல் மார்ஸ் (45) மற்றும் ஸ்டோய்னிஸ் (25) ஆகியோரின் பங்களிப்பு மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 168 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதே போல் ஃபாரூகி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க தவறியதால், 103 ரன்கள் எடுப்பதற்கே ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பின் களத்திற்கு வந்த ரஷீத் கான் யாரும் எதிர்பாராத வகையில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரஷீத் கானின் அதிரடி ஆட்டத்தின் மூலம் கடைசி ஒரு ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு ஆஃப்கானிஸ்தான் அணி வந்தது, கடைசி ஓவரிலும் பயமே இல்லாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 ரன்கள் எடுத்தாலும், எஞ்சியுள்ள நான்கு ரன்களை எடுக்க தவறியதால் ஆஃப்கானிஸ்தான் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், அடுத்ததாக இந்த போட்டியில் மிகப்பெரும் ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கும் அரையிறுதி வாய்ப்பு கிடைத்திருக்கும், ஆனால் ஆஸ்திரேலிய அணி வெறும் 4 ரன் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது அந்த அணிக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்றே தெரிகிறது.
நாளை நடைபெறவுள்ள இங்கிலாந்து, இலங்கை அணிகளின் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குச் செல்லும். இங்கிலாந்து வெற்றிபெற்றால் நல்ல ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அரையிறுதிக்குச் செல்லும்.