
தமிழகத்தில் கோவை, திருப்பூர், குமரி மாவட்டம் நீங்கலாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மனு அளித்தனர். ஆனால், போலீசார் அனுமதி அளிக்காததால் உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நவ.6ஆம் தேதி அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பான விசாரணை கடந்த 2ஆம் தேதி மீண்டும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நடந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்,ஆர்.இளங்கோ உளவுத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்து வாதங்களை முன்வைத்தார். ஆர்.எஸ்.எஸ்., தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உளவுத்துறை அறிக்கையை ஆய்வு செய்த பின் மீதமுள்ள இடங்களில் அனுமதி வழங்குவது குறித்து 4ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார். இந்நிலையில் நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது…
கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தவிர்த்து மற்ற 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். அதாவது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோயில், அருமனை பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும். காவல்துறை, பழைய சம்பவங்களை சுட்டிக்காட்டி உளவுத்துறை அறிக்கையை அளித்துள்ளது. உளவுத்துறை சுட்டிக்காட்டிய 6 இடங்களில் ஊர்வலம் நடத்துவது குறித்து 2 மாதங்களுக்கு பிறகு மனு அளிக்கலாம். நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முழுமையாகப் பின்பற்ற வேண்டும் .. என்று உத்தரவிடப்பட்டது.




