வரலாற்று சாதனை வெற்றி கண்ட இந்திய அணி, தொடரை வென்று சாதித்தது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். இதனால் நன்கு முன்னிலை பெற்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது. மேலும் தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரையும் வென்று அசத்தியது.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது.
இதை அடுத்து நேற்று ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். இதை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பின் தவான் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி (36) ரன்-அவுட்டானார். ரகானே 8 ரன்களில் திரும்பினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த ரோகித், ஒரு நாள் அரங்கில் 17வது சதம் விளாசினார். இவர் 115 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
நிகிடி ‘வேகத்தில்’ பாண்ட்யா (0), ஸ்ரேயாஸ் ஐயர் (30) அவுட் ஆயினர். தோனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் (19), குல்தீப் (2) களத்தில் இருக்க, இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது.
பின்னர், களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், ஆம்லா ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. மார்க்ரம் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். டுமினி (1), டிவிலியர்ஸ் (6) சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க. ஆம்லா (71) அரை சதம் அடித்து அசத்தினார். மில்லர் 36, கிளாசன் 39 நன்கு விளையாடிய போதும், ஒரு புறம் விக்கெட் சரிந்து கொண்டே வந்தது. முடிவில், தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 4-1 என்ற நிலையில் கைப்பற்றியது.
இந்த தொடர் வெற்றியின் மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 4 முறை (1992-93ல் 2-5, 2006-07 ல் 0-4, 2010-11ல் 2-3, 2013-14ல் 0-2) தென்னாபிரிக்காவில் ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, ஒருமுறை கூட தொடரை வென்றதில்லை.