திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், புலிவனம், நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதை அடுத்து திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
கன மழையின் தன்மையைப் பொறுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என்று மாவட்டப் பள்ளிகளுக்கு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.