விஷ்ணு காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தரிசனம் அருளும் அத்திவரதர் பெருமாள் இன்னும் இரு நாட்களில் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளப் போகிறார்.
ஜூலை 1ம் தேதி தொடங்கி கடந்த 45 நாட்களாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதர் பெருமானை தரிசனம் செய்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் நாளே வந்திருந்து தரிசனத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.
அத்திவரதர் பெருமானே, முற்காலத்தில் ஆழ்வார்களாலும், ஆசார்யப் பெருமக்களாலும் போற்றி வணங்கப் பட்ட பெருமாள். அவரே வரம் தரும் வரதராசன் என்றும், பேசும் பெருமாள் என்றும் போற்றப் படுபவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வைணவம் வளர்த்த மகான் ஸ்ரீ ராமானுஜரின் குருவாக இருந்த திருக்கச்சி நம்பிகள், இந்தப் பெருமானுக்குத்தான் ஆலவட்டில் எனும் விசிறி வீசும் கைங்கரியம் செய்து வந்தார் என்றும், அவருடன் இந்தப் பெருமாள் உரையாடுவார் என்றும், இவர் மூலமே ராமானுஜருக்கு புகழ்பெற்ற ஆறுவார்த்தைகளை திருக்கச்சி நம்பிகள் கேட்டுப் பெற்று அறிவித்தார் என்றும் கூறுவர்.
பின்னாளில் ஏதோ காரணங்களால் அனந்தசரஸ் திருக்குளத்துள் எழுந்தருளிய பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளச் செய்து, 48 நாட்கள் ஒரு மண்டலம் அலங்காரம் செய்து தரிசிக்கும் வழக்கம் வந்துள்ளது. இருப்பினும், இந்தப் பெருமாளுக்கு திருவாராதனம் எனப்படும் பூஜைகளோ, வேறு ஆகம பூஜைகளோ கிடையாது. மூலவராக வீற்றிருக்கும் வரதராசருக்கு நிவேதனம் ஆகும் போது, இவருக்கும் நிவேதனம் செய்விக்கப் படுகிறது.
தினந்தோறும் விதவித அலங்காரங்களைச் செய்து, பக்தர்களின் தரிசனத்துக்காக அத்திவரதர் இங்கே எழுந்தருளியுள்ளார்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் அருளும் அத்தி வரதரின் இன்றைய 45 ஆம் நாள் (14.08.19) அலங்காரத்தை இங்கே தரிசியுங்கள்…