இனி, திருமலை திருப்பதி ஸ்ரீவாரி தரிசனத்திற்காக செல்பவர்கள் ஏசி அறைகளில் தங்குவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்! ஏனென்றால் அறைகளின் வாடகையை அதிகரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.!
சாதாரண அறைகளின் வாடகை அதிகரிக்கப்பட வில்லை என்றாலும், ஏசி வசதியுள்ள அறைகளின் வாடகையை மட்டும் பெருமளவு உயர்த்தியிருக்கிறார்கள்.
வரும், நவம்பர் 12, 26 தேதிகளில் முதியோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கும், நவம்பர் 13, 27 தேதிகளில் சிறு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் ஸ்ரீவாரி சிறப்பு தரிசனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
65 வயதிற்கு மேற்பட்ட முதியோர், ஊனமுற்றோர் ஆகியோருக்காக 4000 டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. காலை 10 மணி ஸ்லாட்டுக்கு 1000, மதியம் 2 மணிக்கு 2000 டிக்கெட்டுகள், 3 மணிக்கு 1000 டிக்கெட்டுகள் ஒதுக்கியுள்ளது.
முதியோரும் ஊனமுற்றோரும், கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் திருமலைக்கு வந்து சிரமத்துக்கு ஆளாகக் கூடாது என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் பெற்றோரும் நவம்பர் 13, 27 தேதிகளில் புதன் கிழமை காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் ஒன்றரை மணி வரை ‘சுபதம்’ மார்க்கம் வழியாக சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
சாதாரண நாட்களில் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் சுபதம் மார்க்கம் வழியாக சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி உள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இந்த இரு நாட்களும் சுபதம் வழியாக அனுமதி அளிக்கப்பட்டுகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வாடகை விவரம்:- நந்தகம் ஓய்வு விடுதி 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய்க்கு அதிகரிப்பு.
கௌஸ்துபம், பாஞ்சசன்யம் விடுதிகள் 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக அதிகரிப்பு!