நீண்ட மற்றும் சூடான விவாதத்திற்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா மீதான வாக்களிப்பு இறுதியாக நிறைவடைந்தது. மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதை அடுத்து, குடியுரிமை திருத்த சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதன் மீது குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதும், இந்த மசோதா சட்டமாக வரும்.
வரலாற்றுச்சிறப்பு மிக்க குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவை மற்றும் மக்களவை இரண்டிலுமே நிறைவேற்றப் பட்டு விட்டது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை பெற இது வழி வகுக்கிறது.
இந்த மசோதா காங்கிரஸ் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது! சிவசேனா, ஒரு இந்துத்துவா கட்சி என்று கூறிக் கொள்கிறது, ஆனால் இந்துக்களுக்கு ஆதரவான தன்மையுடன் கூடிய இந்த சட்டத் திருத்த மசோதா வாக்களிப்பின் போது, அக்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
‘சமூக ஆர்வலர்கள்’ மற்றும் ‘அறிவுஜீவிகள்’ போர்வையில் செயல்படுபவர்கள், இந்த மசோதாவை எதிர்த்து தாராளவாத நடுநிலை கும்பலில் சேர்ந்துள்ளனர். மசோதாவை எதிர்ப்பதற்கு ஏராளமான வினோதமான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு இந்திய முஸ்லிம்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் சிலர் அதை முஸ்லிம் எதிர்ப்பு என்றே முன்னிலைப் படுத்தி பிரசாரம்செய்தனர்.
மசோதா தாக்கல் செய்யப்பட்டு இறுதியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் சமூக ஊடகங்களில் ‘லிபரல்’ கூட்டத்தினரிடையே ஒரு பிரசாரம் முன்வைக்கப் பட்டது. இந்த மசோதா மீதான இத்தகைய எதிர்ப்பை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிராகரித்தன! குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விரைவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மசோதா சட்ட வடிவாக்கம் பெற கையெழுத்திடுவார்.