ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் சிக்கிய காஷ்மீர் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங், தில்லியில் குடியரசு தின விழாவில் நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டியிருந்தாரா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்களை படுகொலை செய்த சம்பவங்களில் காவல்துறை தேடப்பட்ட தீவிரவாதி நவீது பாபு. காஷ்மீரில் சோதனை சாவடி ஒன்றில் காரை சோதனையிட்ட போது நவீது பாபு சிக்கினார்.
அவருடன் தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் மற்றும் இன்னொரு தீவிரவாதியான அல்டாப் ஆகியோர் சிக்கினர். ஏற்கனவே நாடாளுமன்ற தாக்குதலில் காவல் அதிகாரி தாவிந்தர் சிங் தொடர்பு குறித்து, 2013-ல் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு தமது வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருந்தார்.
2001-ல் நாடாளுமன்றத்தை பயங்கரவாதிகள் தாக்கிய போது அவர்களுக்கு தில்லியில் தங்கி உதவி செய்ய அப்சல் குருவை அனுப்பி வைத்ததே தாவிந்தர் சிங் என்பது அவரது வாக்குமூலம். ஆனால் தாவிந்தர் சிங் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
இந்நிலையில் 2 தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங் தில்லி நோக்கி சென்ற நிலையில் பிடிபட்டுள்ளார். தில்லியில் குடியரசு தின ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.,
இந்த விழாவை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடன்தான் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங், தீவிரவாதிகளை தில்லிக்கு அழைத்து செல்ல முயன்றிருக்கலாம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
தாவிந்தர் சிங்கிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக் கூடும் எனவும் கூறப்படுகிறது.