இந்திய ராணுவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஃபீல்டு மார்ஷல் ‘கோடந்தேரா’ எம் கரியப்பா (அப்போது லெப்டினன் ஜெனரல்) இந்தியாவின் முதல் கமாண்டர் இன் சீஃப் ஆக, அன்றைய இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கமாண்டராக இருந்த ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சாருக்கு அடுத்து ஜனவரி 15, 1949 அன்று பொறுப்பேற்றார்.
இந்திய தலைநகர் நியூ டெல்லியிலும் அனைத்து முக்கிய அலுவலகங்களிலும் இன்று ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களை பாராட்டும் நாளாக இதனை கொண்டாடுகிறோம்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான இந்தியன் ஆர்மியின் முக்கிய கடமை இந்தியாவை பாதுகாப்பதோடு நாட்டில் அமைதியை நிலைநாட்டி எல்லைப் பாதுகாப்பை கண்காணிப்பதும் ஆகும்.
தற்போது இந்தியாவின் ராணுவத்தில் சுமார் 25 லட்சம் வீரர்கள் உள்ளனர். இதில் 12 லட்சம் வீரர்கள் ரிசர்வ் படை. அதாவது இந்த வீரர்கள் தேவை ஏற்பட்டால் மட்டுமே களத்தில் இறங்குவார்கள்.
சில நாடுகளில் ஒவ்வொரு பிரஜையும் கட்டாயம் ஆர்மியில் பணியாற்ற வேண்டும் என்று சட்டம் உள்ளது. இந்தியாவில் அவ்வாறு இல்லை. தன்னார்வத்தோடு நாட்டு தொண்டாற்ற விரும்புபவர்கள் சேரலாம்.
ஐநா சபை மேற்கொண்ட பல அமைதி பாதுகாப்பு செயல்களிலும் இந்திய ராணுவம் பங்குகொண்டு சிறப்பாக செயலாற்றி வருகிறது.