மதுரையில் கோயில் இடத்தில் கழிப்பறை கட்டி, வாடகைக்கு விட்ட நபர் குறித்த விவகாரத்தில், பாஜக., ஐடி பிரிவினருக்கும் திமுக.வின் பிடி ராஜனுக்கும் டிவிட்டர் போர் மூண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் பாஜக.,வின் அதிகார பூர்வ டிவிட்டர் பதிவில்…
தேன் எடுத்தவன் புறங்கையை ருசிப்பானாம்
இந்து விரோத கட்சிக்கு இந்து கோவில் இடங்களை அபகரிக்க இனிக்கிறதோ?
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் @ptrmadurai கீழ் நடந்த முறைகேட்டிற்கும் மன்னிப்பு கேட்பாரா @mkstalin
PKயார் வித்தை எல்லாம் @arivalayam த்திடம் பலிக்குமா என்ன? – என்று கருத்து பதிவிட்டிருந்தனர்.
இதற்கு பிடி ராஜன் அளித்துள்ள டிவிட்டர் பதில்..
பொதுவாக இது போன்ற கேடுகெட்ட செயல்களின் மீது நான் கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில்,
@BJP4TamilNadu முன்வைக்கும் கேவலமான அவதூறுகளுக்கு எதிர்வினையாற்றும் அளவுக்கு நான் தரம் தாழ்வதில்லை.
ஆனால், எதற்கும் எல்லை உண்டு. பதிவை நீக்கி மன்னிப்பு கோராவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்… -என்று கூறியிருந்தார்.
இந்த டிவிட்டர் போருக்குப் பின்னணியில் உள்ள செய்தி இதுதான்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமையான காசிவிஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியில் நவீன கழிப்பிடம், குளியறைகளை கட்டி வாடகைக்கு விட்ட தி.மு.க., மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ. போஸ் உட்பட 12 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மதுரை சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை வைகை ஆற்றின் கரையில் பழமையும், புராதன சிறப்பும் மிக்க காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது.
கோயிலுக்குள் இருக்கும் பழமையான கல் மண்டபம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது. கல் மண்டபம் மற்றும் கோயிலை சுற்றிலும் 30 சென்ட் நிலம், அறநிலைத்துறையின் ஊழல் அதிகாரிகள் சிலரால் பல ஆண்டுகளுக்கு முன்பு மாத வாடகையாக வெறும் ரூ.32 நிர்ணயம் செய்து பலருக்கு கை மாற்றப்பட்டது. 1998 க்கு பின் வாடகை ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மீண்டும் புதிய நபர்களுக்கு வாடகைக்கு விட கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
தி.மு.க., மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி 82வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான செ.போஸ், பாலு, ராஜாராம், அருண், போஸ், மதுரை வீரன், ஜாபர், கதிரேசன், ராஜேந்திரன், ஐயப்பன், நாகராஜன், சீனிவாசன் ஆகியோருக்கு பல்வேறு காலகட்டங்களில் கோயில் நிர்வாகம் வாடகைக்கு விட்டது.
கோயிலுடன் இணைந்த கல் மண்டபத்தில் தடுப்புச்சுவர் எழுப்பி, கல் மண்டபத்தில் நவீன கழிப்பறைகள், குளியலறைகளை கட்டி செ.போஸ் கட்டணம் வசூலித்தார். எனினும், கோயிலுக்கு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச வாடகையை செலுத்தவில்லை. இவரை போலவே காலி இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு எடுத்த 11 பேரும் உள் வாடகைக்கு விட்டு கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் ஏப்பம் விட்டு வந்தனர்.
இதில் செ.போஸ் மட்டும் ரூ.22 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். கோயில் இணை கமிஷனர் நடராஜன் கோயில் இடத்தை உள் வாடகைக்கு விட்ட 12 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிலத்தில் இருந்து காலி செய்யும்படி, நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் ஆசாமிகள் அசரவில்லை. கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டது.
தற்போது இந்த கட்டிடம் சீல் வைக்கப்பட்டது… 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது