கொரோனா வைரஸ் குறித்து நாள் தோறும் புதிது புதிதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வலிப்பால் உயிரிழந்த ஒருவர், கொரோனாவால் தான் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
மதுரை மாவட்டம் சொக்கலிங்க நகர் பகுதியில் வசித்து வந்த முதியவர் ஜெகநாதன், இரண்டு நாட்களுக்கு முன்னர் மருந்து வாங்க கடைக்கு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அவருக்கு வலிப்பு வந்து விட்டதால் சிறிது நேரத்தில் அவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருக்கிறது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவ, முதியவர் கொரோனா வைரஸ் முற்றியதால் தான் ரோட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக வதந்தி பரவி வருகிறது.
ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால் தவித்து வரும் மக்களிடையே, இத்தகைய வதந்திகள் பெரும் பீதியை ஏற்படுத்தும். அதனால் இத்தகைய வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.