பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது. இதனால், தலைநகர் பெங்களூருல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மகாதாயி நதிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. கன்னட அமைப்புகள் இந்த முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாட்டள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் கர்நாடகா சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்துவதால், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பெங்களூரு நகர காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் காலை முதலே போலீசார் ரோந்து வருகின்றனர். ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்பட்டுத்தப் பட்டுள்ளது. அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல், குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் பெங்களூருக்கு வருகின்றனர் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.