தமிழகத்தில் இன்று 1989 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்ச அளவாக, 1989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது.இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேரிட்ட உயிரிழப்பில் இதுவரை ஒரேநாளில் 30 பேர் உயிரிழந்திருப்பதே அதிகபட்ச அளவு. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 11ஆவது நாளாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1000ஐக்கடந்து பதிவானது! சென்னையில் மட்டும் இன்று 1484 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, சென்னையில் இதுவரை கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 30,444ஆக அதிகரித்துள்ளது.
அதே போல், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 1,362 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதை அடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,409ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது!
சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 78 பேருக்கும் கொரோனா இன்று உறுதி செய்யப் பட்டுள்ளது.