சேலம் : எஸ்.எஸ்.ஐ.யுடன் கைகலப்பில் ஈடுபட்டு எட்டி உதைத்த முன்னாள் திமுக., எம்.பி. அர்ஜுனன்(77) மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் நல்லகவுண்டம்பட்டியைச் சேர்ந்த அர்ஜுனன் (77) தர்மபுரி தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி..யாக இருந்துள்ளார். திமுக., அதிமுக., சசிகலா, தீபா பேரவை என்றெல்லாம் அரசியல் பயணம் செய்துள்ள இவர், தற்போது அ.தி.மு.க.வில் உள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் இவர், இரவு 7:30 மணி அளவில் காரில் ஓமலுாரில் இருந்து சேலத்துக்குச் சென்றார்.
ஓமலுார் சுங்கச்சாவடி அருகே அர்ஜுனன் காரில் வந்த போது, அங்கே பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. ரமேஷ், பட்டாலியன் போலீஸ் தேசிங் ஆகியோர் அர்ஜுனன் காரை நிறுத்தினர். தேசிங் அவரிடம், இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்க, அதற்கு அவர் தாம் ஒரு முன்னாள் எம்.பி, என்று கூறியிருக்கிறார். அதற்கு காவலர், அடையாள அட்டையைக் காட்டுங்க என்று கேட்டிருக்கிறார். அதனால் கடுப்பான அர்ஜுனன், அவரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
இதை அடுத்து காரில் இருந்து இறங்கி வந்து அங்கிருக்கும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து கைகலப்பு ஏற்பட, எஸ்.எஸ்.ஐ. ரமேஷ் அவரைப் பிடித்து தள்ளியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அர்ஜுனன், அவரை எட்டி உதைத்துள்ளார்.
இது குறித்த வீடியோ காட்சிகள் சமூகத் தளங்களில் வைரலாகப் பரவின. இதனால் தம்மை எட்டி உதைத்ததாக எஸ்.எஸ்.ஐ. ரமேஷ் புகார் அளிக்க, அதன்படி அர்ஜுனன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.