ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டத்தில் கலந்து கொள்ள ரஷ்யா சென்றிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று இரவு மாஸ்கோவில் தரையிறங்கியபோது, கைகளைக் குவித்து, ரஷ்ய அதிகாரியை பாரம்பரிய இந்திய ” நமஸ்தே” சொல்லி பதில் மரியாதை செய்தார்.
“இன்று மாலை மாஸ்கோவை அடைந்தேன். ரஷ்ய கவுண்டர் பார்ட் ஜெனரல் செர்ஜி ஷொயுகுடனான எனது இருதரப்பு சந்திப்பை நாளை எதிர்நோக்குகிறேன்” என்று ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்! அவரை மாஸ்கோ விமான நிலையத்தில் மேஜர் ஜெனரல் புக்தீவ் யூரி நிகோலேவிச் வரவேற்றார் என்பது குறித்த வீடியோ செய்தியுடன் அந்த டிவிட் பதிவிடப் பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ராஜ்நாத் சிங், இந்திய தூதர் டி.பி. வெங்கடேஷ் வர்மாவுடன் ரஷ்ய அதிகாரிகள் உடன் நடந்து செல்வது தெரிகிறது. முகக் கவசம் அணிந்திருந்த ராஜ்நாத் சிங், ” நமஸ்தே ” என கைகளைக் குவித்து, ரஷ்ய உயர் ராணுவ அதிகாரி அவருக்கு வணக்கம் தெரிவித்தபோது, பதிலுக்கு வணக்கம் சொன்னார். இது கொரோனா வைரஸின் காலத்தில் உலகத் தலைவர்களிடையே வாழ்த்துக்கான பிரபலமான வடிவமாக மாறியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ரஷ்ய அதிகாரியால் அழைத்துச் செல்லப்பட்டு இந்திய அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் ஒவ்வொருவருக்கும் ” நமஸ்தே ” என்று பதில் சொல்லி மரியாதை செய்தார். அதிகாரிகளில் ஒருவர் கையை நீட்டியபோது, ராஜ்நாத் சிங் அவரிடம் ஏதோ கூறிய படி, கைகளைக் குவித்து “நமஸ்தே ” என்று கூறி வரவேற்குமாறு சைகை செய்தார்.
ராஜ்நாத் சிங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை உயர்த்துவது குறித்து ரஷ்ய பிரதிநிதி செர்ஜி ஷோய்குவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது எஸ்சிஓ எனும் இந்த அமைப்பு.
எட்டு எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பயங்கரவாதம் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு சவால்கள் மற்றும் அவற்றை கூட்டாக கையாள்வதற்கான வழிகள் குறித்து வெள்ளிக்கிழமை திட்டமிடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லடாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ள பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. முக்கியமான இந்தக் கூட்டத்தில் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் மற்றும் பாகிஸ்தானின் பர்வேஸ் கட்டாக் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாதத்திற்குப் பிறகு ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இது. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் வெற்றியின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், ஜூன் 24 அன்று மாஸ்கோவில் நடந்த வெற்றி நாள் அணிவகுப்பில் அவர் இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.