அதிமுகவினரை கண்டித்து பாஜக வினர் இளையான்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பாரதப் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தேசிய செயலாளர் எச் ராஜா தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்கள் பாஜக கட்சி கொடியை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஏற்றினார். இளையான்குடி அருகே கண்ணமங்கலத்தில் பாஜகவினர் கொடியேற்றியதற்கு, அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து பாஜகவினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இளையாங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் இளையான்குடி அடுத்துள்ள கீழாயூரில் பாஜகவினர் கட்சி கொடி ஏற்றியதற்கு இஸ்லாமிய சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று கண்ணமங்கலத்தில், கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவினர் தூண்டுதலால் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்ததை திரும்பப் பெறக் கோரியும், அதிமுகவினர் மறைமுகமாக இஸ்லாமியர்களை தூண்டி பாஜகவினர் மீது மத மோதல் ஏற்பட வழிசெய்வதாகவும் கூறி 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் இளையாங்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் சமாதானம் பேசியதை அடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.
அதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும் தேர்தலில் இளையான்குடி தொகுதியில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை