விருதுநகர் கலெக்டர் அறையின் முன்பு, பெண் கிராம உதவியாளர் திடீர் தர்ணா. குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்…
விருதுநகர் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் வெம்பக்கோட்டை ஊராட்சியில் உள்ள அச்சன்குளத்தில் கிராம உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததால், 10 முறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ராஜேஸ்வரி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி வேலையிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் ராஜேஸ்வரியை அச்சன்குளத்திலிருந்து, பனையடிப்பட்டி ஊருக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதனால் தொடர்ந்து பணியிடம் மாற்றம் செய்யப்படுவதால் மன உளைச்சல் அடைந்த ராஜேஸ்வரி, இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் அறையின் முனபு தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசார் கூறிய சமாதானத்தை ஏற்காமல் தொடர்ந்து தர்ணா செய்த ராஜேஸ்வரியை, சூலக்கரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அந்த இடத்தை விட்டு அகற்றினர்.
மேலும் தர்ணாவில் ஈடுபட்ட அவரை சூலக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை