ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி விழாவின் 9ஆம் நாளான ஞாயிற்றுக் கிழமை நாளை ஆயுத பூஜையும், 10ஆம் நாளான திங்கட்கிழமை விஜய தசமியும் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை நாட்டு மக்களுக்கும், நமது மாநில மக்களுக்கும் இந்த விழா கொண்டு வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.