சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது. மாலையில் மழை சற்றே நின்றிருந்த நிலையில், இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. சென்னையின் நகர்ப் பகுதிகளான ராயப்பேட்டை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பாரிமுனை போன்ற இடங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மழை பெய்தது.
பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இணை இயக்குனர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.