பக்தி என்னும் பாவத்தை வெளிப்படுத்துவதற்கு பக்தர்களுக்கு ஒன்றுசேர்ந்த மனம் இருந்தாலே போதும். பக்தர்களுக்கு தங்களின் இஷ்டமான தெய்வங்களை வழிபட மொழி, இனம், இடம் என எந்த பாகுபாடும் கிடையாது. பக்தி பாவமே தேவை என்பதை மீண்டும் ஒருமுறை நாக்பூரில் உள்ள ஆன்மீக அன்பர்கள் வெளிப்படுத்தி யுள்ளனர்.
நாக்பூரில் பகவத் பாத சபாவினால் நிர்வகிக்கப்படும் சர்வேஸ்வர தேவாலயாவில் சரஸ்வதி ஹோமமும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமானுக்கு அபிஷேகமும் என சிறப்பான நிகழ்வுகள் திரளான பக்தர்களின் பங்கேற்போடு நடைபெற்றது.
K. ஜெகதீஸன் (நிர்வாக உறுப்பினர், பகவத் பாத சபா மற்றும் ஒருங்கிணைப்பாளர், காஞ்சி காமகோடி கைங்கர்யம்) கூறுகையில் “சர்வேஸ்ர தேவாலயம், காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளின் வழிகாட்டலின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது. 60 ஆண்டுகளாக நாக்பூரில் ஆன்மீகத்தை தழைத்தோங்கச் செய்வதில் ஸ்ரீ சர்வேஸ்ர தேவாலயாவின் பங்கும் உள்ளது.
மாணவ மாணவியர் வரும் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு அணுகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும் இன்று கோவிலில் சரஸ்வதி ஹோமமும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமானுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. இன்றைய ஆன்மீகச் சடங்குகளை மணிகண்ட சிவாச்சாரியார், ஜெகதீசன் சிவாச்சாரியார் மற்றும் சர்வேஸ்வர சிவாச்சாரியார் ஆகியோர் சிறப்புடன் செய்து வைத்தனர், ” என்றார்.
வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீீீீமஹி
தன்னோ வாணி ப்ரசோதயாத் என்ற சரஸ்வதி காயத்ரீ மந்திரத்தை ஜபித்து சரஸ்வதி ஹோமத்தில் பக்தர்கள் பெரு மகிழ்வுடன் கலந்து கொண்டனர்.
ஒரு கையில் புத்தகத்துடனும், ஒரு கையில் வீணையுடன் கம்பீரமாக வீற்றிருந்த சரஸ்வதி தேவியினை தமிழர்களுடன் சேர்ந்து உள்ளூர் மக்களும் வழிபட்டு மகிழ்ந்தனர். மாணவ, மாணவிகள் பலர் தங்கள் தேர்வு அனுமதிச் சீட்டுகளை ( Hall Ticket) சரஸ்வதி தேவியின் பாதத்தில் வைத்து தங்கள் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர். சரஸ்வதி ஹோமம் முடிந்தவுடன் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமானுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
K. ஹரிஹரன், தலைவர், பகவத் பாத சபா மற்றும் டிரஸ்டி, ஸ்ரீ ருக்மணி- பாலாஜி மந்திர், பாலாஜுபுரம், பேதூல் ( ம.பி), K.V. கணேசன், பொருளாளர், K. ஜெகதீசன், நிர்வாக உறுப்பினர், P.B.S. மணியன், நிர்வாக உறுப்பினர், S. ராதாகிருஷ்ணன், ஆயுட்கால உறுப்பினர், K. சதாசிவன், செயலாளர், சௌத் இண்டியன் அசோஸியேஷன், T. ராஜகோபாலன், ஆயுட்கால உறுப்பினர், R. ஜெயராமன், நிர்வாக குழு உறுப்பினர், சௌத் இண்டியன் எஜூகேஷன் சொசைட்டி, சண்முக சுந்தரம், மடப்பள்ளி பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்களின் உதவியுடன் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.
- ஜெயஸ்ரீ எம். சாரி