பல லட்சம் மதிப்பிலான நகைகளை காரில் தவறி விட்ட பெண் ஓட்டுநரை அழைத்து பையில் துணிமணிகள் உள்ளதாக மாற்றி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்தவர் பாபி. சிசி டிராவல்ஸ் என்ற பெயரில் கால் டாக்சி நிறுவனம் வைத்துள்ள இவர் கோ டேக்சி, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை இவரது வாகனத்தை கோல்டுவின்ஸ் இருந்து கே.ஜி.மருத்துவமனை செல்ல வாகனம் வேண்டும் என கேட்டு ஒரு பெண், காலை 9 மணிக்கு காரை வாடகை எடுத்துள்ளார். அதில் பெண்கள் உட்பட நான்கு பேர் பயணித்து உள்ளனர்.
அவர்களை மருத்துவமனையில் இறக்கிவிட்ட பிறகு பல்வேறு வாடகைகளை எடுத்துவிட்டு இரவு 9 மணியளவில் ஓட்டுனரும் காரின் உரிமையாளுருமான பாபு வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் இருந்தபோது காலை வாகனத்தில் பயணித்த பயணி அலைபேசி மூலம் தொடர் கொண்டு ஏதாவது பை தங்களது காரில் உள்ளதா என கேட்டு உள்ளார்.
பார்த்து சொல்வதாக பாபு கூறிவிட்டு காரின் டிக்கியை சோதனை செய்தபோது பிக் ஷாப்பர் பை இருப்பதை கண்ட அவர், காரின் டிக்கியில் பை ஒன்று இருப்பதாகவும் அது உங்களுடையதா எனவும் அதில் என்ன இருக்கிறது பையின் அடையாளங்களை கூறுமாறு கேட்டு உள்ளார்.
மேலும் ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா என சும்மா கேட்ட போது துணிமணிகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்து உள்ளனர். பையை திறந்து பார்த்தபோது பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதை கண்ட காரின் உரிமையாளர் இது குறித்து ஓட்டுனர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
காலை அந்த பையுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் ஒப்படைக்க வந்த அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதுடன் பையை தவறவிட்ட நபரை காவல் நிலையம் வர சொல்லி அழைத்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காரில் தவறவிட்ட நிலையில் துணிமணிகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.