வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக வங்கிகள் மீண்டும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்றும், வங்கிகள் 7 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது, நாளை மறுநாள் (மார்ச்.27) மாதத்தின் 4வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் செயல்படாது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை வட மாநிலங்களில் ஹோலி விடுமுறை.
இப்படி தொடர்ந்து 3 நாட்கள் வங்கிப்பணிகள் பாதிக்கப்படுகிறது. இடையில் மார்ச் 30-ஆம் தேதி வேலைநாளாக உள்ளது. 31ஆம் தேதி வேலைநாளாக இருந்தாலும் நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான வங்கி சேவை முழுவதுமாக கிடைக்காது என்று தகவல் பரவி வந்தது.
இதைப்போல அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 1ஆம் தேதி வருடாந்திர கணக்குகளை முடிக்கும் நாள் என்பதாலும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளி விடுமுறை நாள் ஆகும். பின்னர் 3ம் தேதி வங்கிகள் திறக்கும் என்றாலும் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும்.
இப்படி அடுத்தடுத்து விடுமுறை ஆவதால் பொதுமக்கள் வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்கிற அச்சத்தில் பொதுமக்கள் வங்கி பரிவர்த்தனையை முடிப்பதற்கு இப்போதிலிருந்தே கூட்டம் கூடத் துவங்கினார்கள். போதாதற்கு ஏடிஎம்களிலும் வங்கிகள் விடுமுறை என்பதால் பணம் இருக்காது என்று அச்சத்தில் இருந்தனர்.
ஆனால், வங்கிகளுக்கு தொடர் விடுமுறை கிடையாது என்றும் தமிழ்நாட்டில் மார்ச் 29 மற்றும் 31ம் தேதி வங்கிகள் செயல்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு இந்த இரண்டு நாட்களுக்கும் விடுப்பு இல்லை என்றும், ஏப்ரல் 1ம் தேதி ஊழியர்களுக்கு வழக்கம் போல் வங்கி வேலை உண்டு, விடுப்பு கிடையாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.