25. உழைப்பே உயர்வு!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“க்ருஷ்யைத்வா க்ஷேமாயத்வா ரய்யைத்வா போஷாயத்வா”
-சுக்ல யஜுர் வேதம்.
“உழைப்பு, அதன் மூலம் நன்மை, செல்வம், போஷாக்கு”.
வேத கோஷம் எப்போதும் உழைப்பையே போதிக்கிறது. அநியாயமாகப் பொருளீட்டல் எத்தனை தவறோ உழைக்காமல் சம்பாதிப்பது கூட அதே அளவு தவறானது.
கஷ்டப்படாமல் சுகப்பட வேண்டும் என்ற ஆசை வளர்வதால் மனிதன் சோம்பேறியாகிறான். சுகத்தின் மதிப்பு கஷ்டப்பட்டவனுக்குத்தான் தெரியும். எந்த சிரமமும் இல்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால்தான் ஊழல் நோய் பரவி தனிமனிதனுக்கும் தேசத்திற்கும் தீங்கு விளைகிறது.
சிரமப்படாமல் வேறு மார்க்கங்களால் சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் லாட்டரிகளை அடைக்கலம் புகுவார்கள். வேறு சிலர் வஞ்சக வழிகளை கடைபிடிப்பார்கள். ஊழலுக்கு அடிமையாவார்கள். மக்களின் வரிப்பணத்தைக் கூட கொள்ளையடிப்பதற்கு தயங்கமாட்டார்கள் உழைக்காமல் வந்த பணம் ஊழலுக்கு வழி வகுத்து தனி மனித ஆளுமையின் தூய்மையை அழிக்கிறது. தூய்மையற்ற ஆளுமை ஆத்மசக்தியை விலக்குகிறது. அதன் பலனாக எங்கு பார்த்தாலும் அமைதியின்மையும் வேதனையும் நேருகின்றன.
அதனால்தான் வேதம் உழைப்பு பற்றி மிக உயர்ந்த வாக்கியங்களைக் கூறுகிறது.
“தே மனுஷ்யா: க்ருஷின்ச ஸஸ்யன்ச உபஜீவந்தி”
என்பது அதர்வண வேத வசனம்.
மனிதர்கள் உழைப்பு மூலம் கிடைத்த பயனைக் கொண்டு வாழவேண்டும். சிரமம், பலன் இவ்விரண்டுமே மனிதனுக்கு இன்றியமையாதவை.
அதனால்தான் “உத்தமம் ஸ்வரார்ஜிதம் வித்தம் மத்யமம் பித்ரார்ஜிதம்” என்றார்கள். சுயமாக உழைத்துப் பெற்ற செல்வமே உத்தமமானது. பூர்வீக சொத்து மத்திமம் என்று சுபாஷிதங்கள் கூறுகின்றன. மீதி உள்ளவை பிறர் சொத்து. அவற்றிற்கு ஆசைப்படக்கூடாது. வரதட்சனை, லஞ்சம் போன்றவை பிறர் சொத்தின் மீது ஆசைப்படுவதாகும். இவை தீய சம்பாதனையின் கீழ்வரும். ஏனென்றால் அவை உழைப்பின்றி கிடைத்த செல்வம்.
“அக்ஷைர்மா தீவ்ய: க்ருஷிமத் க்ருஷஸ்ய” என்பது ருக்வேத வசனம்.
“சூதாட்டத்தில் காய்களை உருட்டி விளையாடாதே. வாழ்வுக்காக உழைத்து முயற்சி செய்”. சூதாட்டத்தால் வந்த செல்வமும் கீழானது என்று சனாதன தர்மம் உரைக்கிறது.
“ஸோனோ பூமிர்வர்தயத் வர்தமானா” – “உழைப்பின் மூலம் பூமி அனைத்து செல்வங்களையும் நமக்கு அருளுகிறாள். தானும் வளர்கிறாள்” என்று வேதமாதா மீண்டும் மீண்டும் பலமுறை போதிக்கிறாள்.
சோம்பலையும் சோர்வையும் நம் கலாச்சாரம் எத்தனை வெறுக்கிறது என்பதை இந்த வாக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
அரசாளுபவர் மக்களை உழைத்து முன்னேறுபவர்களாக ஆக்க வேண்டும் என்று ஸ்ருதி வாக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
“நோ ராஜானி க்ருஷிம் தனோது” போன்ற வாக்கியங்கள் இதற்கு உதாரணம்.
மக்கள் எளிதாக சுகப்படும் மார்க்கங்களை அரசாங்கம் திறக்கக்கூடாது. அதிர்ஷ்ட வியாபாரங்களை ஊக்குவிப்பது தவறு.
ஸ்வதர்மத்தை கடை பிடிப்பதிலும் கடமையை நிறைவேற்றுவதில் சோர்வுக்கோ சோம்பலுக்கோ இடமளிக்கக்கூடாது. புலன்களும் புத்தியும் சிறப்பாக உழைக்க வேண்டும். அதுவும் தார்மீகமான வழியில் இருக்க வேண்டும்.
தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கு கடவுள் கொடுத்த கருவிகளுள் முதலாவது உடல். “சரீர மாத்யம் கலு தர்ம சாதனம்” என்ற கூற்றுக்கு இதுதான் பொருள்.
உழைக்காதவனுக்கு சுகப்படும் அருகதை இல்லை. அக்கிரமமான, சுலபமான வழிகளில் சேர்த்த செல்வத்திற்கு நிலைத்தன்மையோ உறுதியோ இருக்காது.
நம்மைச் சுற்றிலும் உள்ள ப்ரக்ருதியில் பலப்பல செல்வங்கள் மறைந்துள்ளன. முயற்சித்து உழைத்து அவற்றை வெளிக்கொணர வேண்டும். அந்த பணியில் இயற்கையின் சாஸ்வதமான, தீர்க கால பிரயோசனங்கள் அடிபடாத வண்ணம் கவனம் வகிக்கவேண்டும்.
மானுட வாழ்க்கையை உய்விப்பது உழைப்பு மட்டுமே. “க்ருஷிதோ நாஸ்தி துர்பிக்ஷம்” என்ற புராதன கூற்று வேத உள்ளத்தின் வெளிப்பாடே.
இந்த சனாதன நாதத்தை அமல்படுத்திய நாடுகள் அற்புதமாக முன்னேற்றத்தை சாதித்தன என்பதில் ஐயமில்லை.