30. அனைவரும் நோயின்றி வாழ்வோம்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“உபசித்வா அனமீவா அயக்ஷ்ம அஸ்மப்யம்… ப்ருதிவீ ப்ரஸூதா” – அதர்வணவேதம்.
“ஓ மாத்ருபூமி! உன்னிடம் பிறந்த சந்தானமான நாங்கள் அனைவரும் நோயின்றி ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்!”
இதில் அனமீவா, அயக்ஷ்ம என்ற இரண்டு சொற்கள் உள்ளன. எந்த நோயும் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும். ஒருவேளை நோய் ஏற்பட்டால் அவை நீங்கி விட வேண்டும். அப்படிப்பட்ட அமைப்பு ஏற்படவேண்டும். நம் நாட்டில் மக்கள் அனைவரும் ஆரோக்கியத்தோடும் வளத்தோடும் திருப்தியுடன் வாழ வேண்டும்.
“மா கஸ்சித் து:க பாக்பவேத்” – அனைவரும் சுபத்தை அடைய வேண்டும். சுகத்தை அனுபவிக்க வேண்டும்.
முழுமையான நாட்டு முன்னேற்றம் சமத்துவத்தால் ஏற்படுகிறது. அத்தகைய சமமான தேவைகளை முழுமை செய்து கொண்டு, அவற்றை அபிவிருத்தி செய்து கொள்வது என்ற பணியில் இறங்கிய பின், இனி அல்பமான வர்க்க பேதங்கள் தொலைந்து போகும். ஒவ்வொரு தர்மமும், ஒவ்வொரு மதமும் உயர்ந்ததே. அவரவர் அதனைக் காத்துக் கொண்டால் போதும். ஒருவர் மற்றவரை அவமதித்து, தம்முடையதே உயர்ந்தது என்ற எண்ணத்தை விட்டு விட்டால் சமத்துவம் ஏற்படும். அத்தகைய சமத்துவத்தால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியமாகும்.
அத்தகைய சிறந்த திட்டத்தை நம் பாரத தேசம் என்றோ ஏற்பாடு செய்து விட்டது. அதனை அமல்படுத்தும் திசையில் மக்கள் அனைவரும் இயங்க வேண்டும்
இந்த நல்ல உள்ளத்தையும் நல்லெண்ணத்தையும் பல யுகங்களுக்கு முன்பே வெளியிட்ட மகரிஷிகளின் கண்ணோட்டத்தை வணங்குவோம்!
சமுதாய நலனுக்காக மனிதன் எப்போதும் பாடுபடவேண்டும். சுயநலத்தோடு, நான் நன்றாக இருக்க வேண்டும், என் குடும்பம், என் குலம், என் மதம் நன்றாக இருக்கவேண்டும் என்று மட்டுமே எண்ணாமல், முதலில் என் நாடு முழுவதும் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ண வேண்டும்.
இதில் தனிப்பட்ட கருத்துகள், வர்க்கப் பிரிவுகள் இருக்கலாம். அவரவர் அவரவரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது நல்லதுதான். ஆனால் பிறரை அமுக்கிவிட்டு, தான் மட்டுமே முன்னேற வேண்டும் என்று நினைப்பது இழுக்கு.
ஏனென்றால் வேறுபாடுகள் என்பது மனித நாகரிகத்தில் ஒரு இயல்பான அம்சம். எந்த இருவரும் ஒரேமாதிரி சிந்திக்க மாட்டார்கள்.
சில விஷயங்களில் ஒற்றுமை தென்பட்டாலும் மீண்டும் அவர்களிடையே வேறுபாடுகள் இருக்கும். உதாரணத்திற்கு பலரும் சேர்ந்து ஒரு வர்க்கம் என்று எடுத்துக்கொண்டால் அந்த வர்க்கத்தில் மீண்டும் தனிப்பட்ட மற்றும் குடும்பத்தினர் இடையே வேறுபாடுகள் இருக்கும். ஒரே குடும்பத்தில் கூட வேறுபட்ட மனநிலை உள்ளவர்களைப் பார்க்கிறோம்.
எனவே வேறுபாடுகள் எத்தனை இயல்போ, சேர்ந்து வாழ வேண்டிய தேவையும் கூட அத்தனை இயல்பானதே! ஒன்றுபட்டு, வெறுப்பின்றி மக்கள் அனைவரும் சேர்ந்துவாழ வேண்டும். பிரிவுகளிடையே வெறுப்பு தோன்றினால் அவை சிறிது சிறிதாக நாட்டு நலனுக்கே தீங்கு விளைவிக்கும்.
தம் வர்க்கம் மட்டுமே நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது தோன்றினால், வெளியிலிருந்து தீயசக்திகளை உதவிக்கு அழைத்து வந்து தனக்குப் பிடிக்காதவர் மீது பகை தீர்த்துக் கொள்ளும் ஆபத்து உண்டாகும். அது நாட்டு நலனுக்கே கேடாய் முடியும்.
அதனால்தான் ஒருவருக்கொருவர் வெறுப்பின்றி குடிமக்கள் வாழவேண்டும் என்று வேதம் போதிக்கிறது.
“ஸ ஹ்ருதயம், சௌமனஸ்யம், அவித்வேஷம் க்ருணோமிவ” “வெறுப்பின்றி நாம் ஆற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றுவோமாக!”
ஆனால் வெறுப்பு இன்றி இருப்பது என்றால் நம் இதயத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். யார் எத்தனை வேறுபாடுகளோடு இருந்தாலும் காற்று நீர் உணவு இருப்பிடம் போக்குவரத்துக்கு தேவையான சாலைகள் போன்றவை அனைவருக்கும் தேவைதான். எந்தப் பிரிவைச் சேர்ந்தவரானாலும் அனைவருக்கும் அடிப்படை தேவைகள் ஒன்றுதான்.
தண்ணீர் முதல் பல்வேறு வளங்கள் வரை இன்னும் வளர வேண்டிய திசையில் இருக்கும் நம் தேசத்திற்கு அவற்றை சிறப்பாக ஏற்படுத்திக் கொடுத்து முழுமையான நலன் மீது பார்வையை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற கருத்து இதில் தென்படுகிறது.