உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த ஒரு பச்சிளம் பெண் குழந்தையை ஒரு படகோட்டி மீட்டுள்ளார்.
பொதுவாகக் கங்கை நதியில் படகு போக்குவரத்து வழக்கமான ஒன்றாகும். அவ்வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபுர் பகுதியில் குல்லு சவுத்ரி என்பவர் படகோட்டியாக பணி புரிந்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை மாலை அவர் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது நதியில் ஒரு மரப்பெட்டி மிதந்து வருவதை கண்டு அதை மீட்டு எடுத்தார்.
அந்த பெட்டிக்குள் ஒரு பெண் குழடஹி இருந்தது. அத்துடன் துர்க்கை உள்ளிட்ட பல தெய்வங்களின் படமும் குழந்தையின் ஜாதகமும் இருந்துள்ளது.
அந்த ஜாதகத்தின் படி குழந்தையின் பிறந்த தேதி மே மாதம் 25 என்பதும் குழந்தையின் பெயர் கங்கை மகள் என்பதும் தெரியவந்தது. அந்த குழந்தையை சவுத்ரி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அக்கம்பக்கத்தினரிடம் அவர் இந்த குழந்தையை தமக்குக் கங்கை மாதா பரிசாக அளித்ததாகவும் அதைத் தாமே வளர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிய வந்தது.
அரசு அதிகாரிகள் சவுத்ரியிடம் இருந்து குழந்தையை மீட்டு ஆஷா ஜோதி மையத்தில் சேர்த்துள்ளனர்.
மையத்தினர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்து குழந்தை நலமாக இருப்பதை உறுதிப் படுத்தி உள்ளனர்.
உபி முதல்வர் யோகி படகோட்டி சவுத்ரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து குழந்தையை அரசு செலவில் தத்தெடுத்து வளர்க்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.