புதுச்சேரி மாநிலத்தில் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். அப்போது இந்திய ஒன்றியத்தில் என்ற வார்த்தை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பாஜகவின் தலைவராக இருந்த ஒருவரே இந்திய ஒன்றியம் என்று புதுவை மாநிலத்தில் குறிப்பிடுவதால் தமிழகத்தில் இந்தியாவை ஒன்றியம் என்று குறிப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று தமிழக ஊடகங்களில் சிலரால் நியாயப் படுத்தப் பட்டது.
ஆனால் இதுகுறித்து விளக்கமளிக்கும் தமிழக பாஜகவினர் சிலர், புதுச்சேரி என்பது ப்ரெஞ்ச் காலனி ஆட்சியில் இருந்த ஊர், இப்பொது அது யூனியன் பிரதேசம், அதன் நடைமுறைகள் தமிழகத்துக்குப் பொருந்தாது.
பொதுவாக புதுவையில் அமைச்சர்கள் பதவி ஏற்பின் போது இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு என்று சொல்வது தான் மரபு. முன்னதாக, நாராயணசாமி 2016 ஆம் ஆண்டு பதவி ஏற்ற போது சொல்வதைப் பார்த்தால் அதுவிளக்கமாகத் தெரியவரும். இந்த வழக்கம் பதவி ஏற்பின் போது மட்டும் தான்!
யூனியன் டெரிடரி என்ற சொல்லுக்கு ஒன்றிய பிரதேசம் என்ற பொருளில் புதுவையை அவ்வாறு அழைக்கின்றனர். இந்தியன் யூனியன் டெரிடரி என்பது, இந்திய ஒன்றியப் பிரதேசம் என மாநில வரையறைக்குள் வராத தன்மையைக் கொண்டது. எனவே ஆளுநரின் கட்டுப்பாட்டில், ஒன்றியப் பிரதேசமாக ஆட்சி அமைப்பு முறை கொண்டது.
ஆனால், தமிழகம் அப்படி அல்ல. அது மாநில அந்தஸ்துடன் மாநில அரசுக்கான தனித்துவ அதிகாரத்துடன் இயங்குவது. தமிழகத்தையும் புதுச்சேரியைப் போல், ஒரு யூனியன் டெரிடரியாகக் கருதிக் கொண்டவர்கள் வேண்டுமானால், இந்திய ஒன்றியத்தில் அடங்கிய தமிழக பரப்பு என்று சொல்லிக் கொள்ளலாம்… என பதிலடி கொடுக்கின்றனர்.
தமிழகத்தில் இந்திய எனும் சொல்லை எடுத்துவிட்டு வெறும் ஒன்றியம் என்று மட்டும் சொல்கிறார்கள், அதுவும் மத்திய அரசு என்று சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாம் ஒன்றிய அரசு என்று சொல்வது ஒரு கீழ்த்தரமான அணுகுமுறை, நிச்சயம் இதற்க்கு உண்டான விளைவை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும்… இந்திய அரசால் தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டனவே தவிர, தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருப்பது போல், மாநிலங்களால் இந்திய அரசு அமைக்கப்படவில்லை… என்று தெளிவாகக் கூறுகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்த போது, இந்த விவகாரத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் நான் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் இந்த அரசியலை நான் எதிர்பார்க்கவில்லை.
இது முழுக்க முழுக்க யூனியன் டெரிடரி – அதாவது ஒன்றியப் பரப்பு என்பதை அடியொற்றி வந்தது. இது அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி உள்ளது, இதை யாரும் மாற்றமுடியாது. மேலும், இது மத்திய அரசின் பொறுப்புக்கான பதவி ஏற்பு அல்ல, தமிழகம் போல், புதுச்சேரி என்பது ஒரு யூனியன் பிரதேசம். எனவே யூனியன் (ஒன்றியம்) என்ற வார்த்தை குறிப்பிடப் பட்டது. இதுதான் மொழி பெயர்க்கப்பட்ட பொதுவான உறுதியேற்பு வடிவம்… என்று குறிப்பிட்டார்.
யூனியன் டெரிடரி என்பது, ஒன்றிய ஆட்சிப் பரப்பு என்பதாகக் குறிப்பிடப் படுகிறதே தவிர, இது ஒருக்காலும் இந்திய அரசையோ, மத்திய அரசையோ குறிப்பிடுவது அல்ல. இப்போதும், இந்திய அரசு / மத்திய அரசு என்றுதான் குறிப்பிடுகிறோம் என்கிறார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
எனவே, தாங்கள் சொல்லும் வார்த்தைக்கு துணை தேடிக் கொள்ளும் அரசியலைச் செய்து வரும் ஊடகத்தினர், திமுக., மற்றும் சார்புள்ளவர்கள், எந்த வகையில் எல்லாம் நடப்பியலைத் திரித்து விட உழைக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இந்திய ஒன்றியத்தில் என்று வருவதால் குழப்பம்.. இந்தியாவின் ஒன்றியத்தில் என்று தெளிவாகச் சொல்லியிருந்தால் அப்படி இருந்திருக்காது.
இப்போது ஒன்றிய, ஜெய் ஹிந்த் இவற்றில் எல்லாம் சர்ச்சையைக் கிளப்பி விட்டு, ஊடகங்கள் ஒரு போக்கில் செயல் பட்டுக் கொண்டிருக்க, அவற்றை பொதுமக்கள், நேயர்கள் பார்த்துவிடாத படி, தமிழகத்தில் பரவலாக மின் தடை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்!