அண்ணா என் உடைமைப் பொருள் – 22
பெரியவாளிடம் பயபக்தி; ஸ்வாமியிடம் ஸ்வாதீனம்!
– வேதா டி. ஸ்ரீதரன் –
பெரியவா ஞான சாகரம் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த ஞான சாகரத்துக்கும் பர்த்தியின் ப்ரேம சாகரத்துக்கும் நடுவே பயணித்தவர் அண்ணா என்பதை அனைவரும் அறிவோம்.
ஞானம், ப்ரேமை என்றதுமே, ஸ்வாமி விவேகானந்தர் பற்றி அண்ணாவிடம் பெரியவா சொன்ன விஷயம் நினைவு வருகிறது. The head of Sankara and the heart of Buddha என்று ஸ்வாமிஜி சொல்லுவார்.
அதைப் பற்றி அண்ணாவிடம் ஒருமுறை குறிப்பிட்ட பெரியவா, ‘‘ஹெட்-னா அறிவு, ஹார்ட்-னா ப்ரேமைங்கற அர்த்தத்தில ஆசார்யாளின் அறிவு, புத்தரின் ப்ரேமை-ன்னு அவர் சொல்றார். அதைப் படிச்சா ஆசார்யாளுக்கு ப்ரேமையே இல்லியோன்னு நினைக்கத் தோணறது. ஆசார்யாள் என்ன வறட்டு வேதாந்தியா? அவரோட கருணை பெரிசு இல்லியா? அவருக்கு இல்லாத கருணையா? பெத்த அம்மாவை பரிதவிக்க விட்டுட்டு, இத்துனூண்டு வயசில தேச சஞ்சாரம் புறப்பட்டதுக்குக் காரணம் சமுதாயத்தின் பேர்ல இருக்கற கருணை இல்லியா?’’ என்று ஆரம்பித்து, ஆசார்யாளின் ப்ரேமையையும் கருணையையும் பற்றி கருணா பிரவாகமாகப் பேசினாராம்.
ஆசார்யாளின் சரிதம் என்பதே காருண்யம் தான், ப்ரேமை தான் என்பதை அப்போது பெரியவா விவரித்ததாக அண்ணா குறிப்பிட்டார்.
ஸ்வாமி பற்றி அண்ணா நிறைய எழுதி இருந்தாலும், ‘‘ஸ்வாமி’’ புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஸ்வாமியின் சரிதம் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய நூல் தமிழில் ‘‘ஸ்வாமி’’ மட்டும் தான் என்று சொன்னால் தவறில்லை. இதனால் நிறைய சாயி பக்தர்களுக்கு அண்ணாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.
அண்ணா எப்போது தரிசனத்துக்குப் போனாலும், ஸ்வாமிக்கு அண்ணா ஃபர்ஸ்ட். நேரே அண்ணா அமர்ந்திருக்கும் இடத்துக்குப் போவார், உடனே தலையைத் தட்டி ‘‘Go’’ தான். அண்ணா எப்போது வந்தாலும் ஸ்வாமி அவருக்கு நேரம் ஒதுக்குவார்.
பெரியவா பக்தர்களுக்குப் பெரியவா தான் எல்லாம். அதேபோல, ஸ்வாமி பக்தர்களுக்கு ஸ்வாமி தான் எல்லாம். இதெல்லாம் சரி, அவர்கள் இரண்டு பேர் மீதும் பக்தி கொண்ட அண்ணாவைப் போன்றவர்கள் எப்படி? பெரியவா என்றால் கை கட்டி, வாய் பொத்தியும், ஸ்வாமியைப் பற்றிப் பேச்செடுத்தால் அன்யோன்யமாகவும் என்று இருக்குமாம்!
பெரியவாளிடம் பயபக்தி. ஸ்வாமியிடம் ஸ்வாதீனம்.