மொகாலி: ஐ.பி.எல்., 11வது சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழகத்தின் அஷ்வின் நியமிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் அணியில் தற்போது அஷ்வின், யுவராஜ், லோகேஷ் ராகுல், ஆஸ்திரேலியாவின் பின்ச் என நான்கு பேர் கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளனர். முழு நேர விக்கெட் கீப்பர் கேப்டனாக இருப்பார் என்ற எண்ணத்தில் தான் ராகுலுக்கு ரூ. 11 கோடி தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர், கடந்த சீசனில் தோள்பட்டை காயம் காரணமாக முழுமையாக விளையாடவில்லை. அவருக்கு திடீர் திடீரென காயம் ஏற்படுவதால் அணிக்கு சிக்கல் ஏற்படுகிறதாம்!
ஆஸ்திரேலிய டி–20 பிக் பாஷ் தொடரில் ரெனிகேட்ஸ் அணி கேப்டனாக இருப்பவர் ஆரோன் பின்ச். அவர் இம்முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் முதல் சீசனில் (2008) பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்து, மீண்டும் அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங்கும் கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளாராம்.
அடுத்து கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளவர் தமிழகத்தின் அஷ்வின். சென்னை அணிக்காக 8 சீசனில் பங்கேற்றவர். டி.என்.பி.எல்., தொடரில் திண்டுக்கல் அணி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இவரை கேப்டனாக நியமிக்கவே ரூ. 7.6 கோடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னை அணியில் தொடர்ந்து தன்னால் செயல்பட முடியாத வருத்தத்தில் இருந்த அஸ்வினுக்கு இந்த மாற்றம் கைகொடுக்குமா என்று பார்க்கலாம்.