அம்மாவை ஒருமுறை சந்திக்கும்படி யோகி ஆதித்யநாத்துக்கு அவரது சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் பௌர கர்வாலின் பஞ்சூர் கிராமத்தில் பிறந்தவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இவரது சகோதரி சசி சிங் தனது கிராமத்தின் அருகே சிறிய கடை நடத்தி வருகிறார். யோகி ஆதித்யநாத்தின் சகோதரி சசி சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
சகோதரர் மாநிலத்தை ஆட்சி செய்கிறார், சகோதரி சிறிய கடை நடத்துவதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு சசி சிங் எந்தவித தயக்கமும் இன்றி பதிலளித்தார்.
சசி சிங் கூறியதாவது:
யோகி ஆதித்யநாத் 18 வயதில் துறவியாக மாறுவதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வீட்டை விட்டு செல்லும்போது துறவியாக மாற போகும் விஷயத்தை வீட்டில் தெரிவிக்கவில்லை. எனது குடும்பம் வம்ச அரசியலை விரும்பவில்லை.
மற்ற கட்சிகளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் சேருகிறார்கள். ஆனால் அது எங்கள் குடும்பத்தில் இல்லை. அப்படி இணைந்தால் அது வம்ச அரசியலாக மாறும். எங்களுக்கு இது வேண்டாம். மேலும் யோகி ஆதித்யநாத்தும் அதைத்தான் தெரிவித்தார்.
யோகி ஒரு முறை தந்தையிடம் நம் குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொள்ளாமல் மற்றவர்களை பற்றியும் யோசிக்கும்படி கூறினார். அதற்கு எங்கள் தந்தை வெறும் ரூ.85 சம்பாதிக்கிறேன், மற்றவர்களை பற்றி என்னால் நினைக்க முடியாது. மேலும் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்ப்போம் என்று தெரிவித்தார்.
இப்போது அவர் (யோகி) அதை (மற்றவர்களுக்கு செய்வதை) காட்டியுள்ளார். அம்மாவை ஒருமுறை சந்திக்கும்படி அவரை (யோகி ஆதித்யநாத்) கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.