மேற்கு வங்காள மாநிலம் பிர்மம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர், கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மே.வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ் பாஜக போர்கொடி தூக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பான்ர்ஜிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. மம்தா பானர்ஜியை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மத்திய விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதால், மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். மாநிலத்தில் நடைபெறும் அரசியல் கொலைகள் கவலை அளிக்கின்றன. கடந்த மாதத்தில் மாநிலத்தில் 26 அரசியல் கொலைகள் நடந்துள்ளன என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
தேர்தல் வன்முறை மற்றும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் பல உயிர்களைக் கொன்றுள்ளன. முழு மாநிலமும் அச்சம் மற்றும் வன்முறையின் பிடியில் உள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழுவை அனுப்புவதால் எந்தப் பயனும் இல்லை. மாநிலத்தில் அரசியல் சாசன இயந்திரம் சீர்குலைந்திருப்பது குறித்து தேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த தீவிரமான விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்.
மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 355 வது பிரிவைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வன்முறை நடைபெற்ற பிர்பூம் பகுதிக்கு இன்று செல்லும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அங்குள்ள நிலைமை குறித்த அறிக்கையை காங்கிரஸ் மேலிடத்தில் சமர்பிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இதனிடையே, பிர்பூம் வன்முறை சம்பவத்திற்கு பொறுப்பேற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்ச பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலக வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், வன்முறை நடந்த போக்துய் கிராமத்திற்கு சென்று, நிலைமையை நேரில் ஆய்வு செய்யப்போவதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது, நமது அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக பாஜக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் செய்யும் முயற்சியாகும். பிர்பம் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது, அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே காவல்துறை பொறுப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை நீக்கியுள்ளோம் என்றார்.
நான் இன்று போக்துய் கிராமம் செல்ல உள்ளேன். நான் எந்த மோதலிலும் ஈடுபட விரும்பவில்லை என்றும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.





