கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
எனினும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து மக்கள் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
கொரோனா தொற்று பாதிப்பும் வெகுவாக குறைந்து விட்டதால், அதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை சுயவிருப்பத்தின் அடிப்படையில் பின்பற்றிக்கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 230 மட்டுமே உள்ளது.
தொடர்ந்து தடுப்பூசி, மாஸ்க் அணிதல் மற்றும் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தயவு செய்து தடுப்பூசி போடுங்கள் என்று கூறியுள்ளார்.