தென்காசியில் பராக்கிரம பாண்டிய மன்னரின் பஞ்சலோக திருமேனிக்கு நெற்கட்டான்செவல் பாண்டிய மன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளை சார்பில் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.
தென்காசியை தலைநகராகக் கொண்டு சடையவர்மன் அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னர் மணிமுடி சூட்டிக்கொண்டு செங்கோல் ஆட்சி பொறுப்பேற்ற 600வது ஆண்டு நிறைவு மற்றும் அருள்மிகு காசி விஸ்வநாதரை தென்காசி பெரிய கோவிலில் பராக்கிரம பாண்டிய மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு 575 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இதற்கு சிறப்பு செய்யும் வகையில் தென்காசி பெரிய கோவில் காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை வழிபாடு மற்றும் சடையவர்மன் அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னரின் பஞ்சலோக திருமேனிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நெற்கட்டான்செவல் பாண்டிய மன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளை சார்பிலும், மணியாச்சி ஜமீன் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் நடத்தப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பூலி துரை சூர்யபாண்டியன் தலைமையில் அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
செய்தி : தென்காசி ஜீவா