அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அவசரகதியில் பொது பாடத்திட்டமா? கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாணவர்கள் கல்வித் தரத்தை குலைக்க திட்டமா? என்று, ந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தங்களது சித்தாந்தத்தையும், கொள்கையையும் மாணவர்களிடத்தில் திணிக்க முற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த முறை தரமே இல்லாத சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்து கல்வியை சீரழித்ததுபோல, இந்த முறை பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி அதே நிலையை உருவாக்க திமுக நினைக்கிறது. ஆசிரியர்களிடத்திலும் மாணவர்களிடத்திலும் பெற்றோர் மற்றும் தொழில் முனைவோர்களிடத்திலும் எந்த விதமான கருத்தையும் கேட்காமல் ஒரே ஆண்டில் 301 பாடத்திட்டங்களை தயாரித்து, அதை ஆசிரியர்களிடத்தில் கூட கலந்தாலோசிக்காமல் அமல்படுத்த அவசரம் காட்டுவது மாபெறும் தவறாகும்.
பாடத்திட்டத்தை போதிக்க சரியான பயிற்சி அளிக்காமலும், பாடப் புத்தகங்களை விநியோகிக்காமலும் தனியார் நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை மேற்கோள்காட்டி அதை வாங்கி மாணவர்களை படிக்க சொல்வது ஏன்?
அதேபோல இன்ஜினியரிங் படிப்பு அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. அதை திருத்தி ஒரே மாதிரியாக பாடத்திட்டம் கொடுக்கப்படும் என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இத்தகைய அவசர கதியில் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது கருணாநிதி நூற்றாண்டு விழாவிற்காக எனவும், சிலரை திருப்திப் படுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் முயற்சிக்கிறார் எனவும் மக்கள், மாணவர்கள் கருதுகிறார்கள்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து இருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் மாணவர்கள் நலனிலா அக்கறை காட்டிவிடப் போகிறார்? என்றும் மக்கள் பேசுகிறார்கள்.
எனவே தமிழக அரசு கல்வித்துறையில் எதேச் அதிகாரப் போக்குடன் செயல்பட்டு மாணவர்களின் வாழ்க்கையை சிதைக்க வேண்டாம் எனவும் இந்த பொதுப்பாடத் திட்ட முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது.