தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, தமிழில் தொடங்கி தனது உரையை அளித்தார்.
பிரசாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த பிரதமர் மோடி சிறு, குறு தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு-குறு தொழில்கள் வளர்ச்சி என பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார்.
பின்னர், தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, அங்கிருந்து காரில் பயணம் செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். மதுரையில் பிரதமர் மோடியை வரவேற்க சாலையில் காத்திருந்த மதுரை ஆதீனத்தைக் கண்டதும், காரை நிறுத்தச் சொல்லி, அவருக்கு வணக்கம் செலுத்தினார். அப்போது மதுரை ஆதினம் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதிகளில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு செய்தார். வேட்டி, ஜிப்பாவுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து, பாரம்பரிய உடையில் ஆலயத்தில் தொழுவதன் மகிமையை எடுத்துக் காட்டினார் பிரதமர் மோடி.
ஆலயத்துக்கு வந்த பிரதமர் மோடியை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் , பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றார். இவர் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் தாயார் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை வந்திருந்த மோடி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அப்போது தக்காராக இருந்து மோடியை வரவேற்றார் கருமுத்து கண்ணன். கடந்த வருடம் அவர் காலமான நிலையில், இந்த வருடம் தக்காராக பொறுப்பேற்றுள்ளார் ருக்மிணி பழனிவேல்ராஜன்.
முன்னதாக பிரதமர் மோடி வருகையை ஒட்டி மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் பிரதமர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதால், பாதுகாப்பு காரணங்களால் இன்று மாலையில் இருந்து பொது மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் இன்று இரவு பசுமலை நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.