புனலூர் செங்கோட்டை மலைப்பாதையில் இயக்கப்படும் ரயில்களின் பெட்டிகள் அதிகரிக்கப்படுகின்றன.
பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரயில் எர்ணாகுளம் கோட்டயம் முதல் கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் வழியாக வாரம் இரு முறை இயக்கப்படுகின்ற வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 18 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளன. ஏப்ரல் மாதம் 6ம் தேதியில் இருந்து எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயிலிலும், ஏப். 7ம் தேதியில் இருந்து வேளாங்கண்ணியில் இருந்து கிளம்பும் ரயிலிலும் பெட்டிகள் அதிகரிக்கப்படுகின்றன.
இரண்டாம் வகுப்பு Sleeper படுக்கை வசதி பெட்டிகள் ( 2) மற்றும் மூன்றாம் வகுப்பு 3rd ஏசி பெட்டிகள் (2) இணைக்கப்பட்டு மொத்தம் 18 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட உள்ளன . இந்த வழித்தடத்தில் செங்கோட்டை முதல் கொல்லம் வரை உள்ள மலை வழி ரயில் பாதையில் 14 பெட்டிகள் மட்டுமே இயங்கும் ரயில்களை கூடுதல் பெட்டிகள் இணைக்க வசதியாக கடந்த ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது
இந்த சோதனை ஓட்டத்தின் முடிவில் 22 பெட்டிகள் வரை இந்த மலைவழிப் பாதையில் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழியில் இயங்கும் கொல்லம் – செங்கோட்டை – ராஜபாளையம் – சென்னை விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் – பாலக்காடு இடையே இயங்கும் விரைவு ரயில்களிலும், 18 பெட்டிகளாக அதிகரித்து இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்து உள்ளது.
மலைப்பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்கள் 22 பெட்டிகளுக்கு ஏற்ற வகையில் நீளமாக இல்லை என்பதால், பிளாட்பாரங்கள் நீட்டிக்கப்பட்ட பிறகு வருங்காலத்தில் 22 பெட்டிகளுடன் இந்தப் பாதையில் ரயில்கள் இயங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.